எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

வெள்ளி, 30 அக்டோபர், 2009

ஈழ வேந்தனுக்கு எம் இதய அஞ்சலி- வீர வணக்கம்.!

(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர்  சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவினை தழுவிய செய்தியறிந்து அந்நிமிடமே நான் தீட்டிய கண்ணீர் கவிதை- இன்றும் எம் மக்களின் மாறா அதே நிலை.........!.)



* என் இனிய தோழா..!

   நீ
   புதைக்கப்பட வில்லை
   விதைக்கப்பட்டிருக்கிறாய்..!

* விடுதலை வேட்கையில்
   உன்
   எரிதழல் ஏந்தி
   வீறு கொண்டெழும் தமிழினம்..!


* உன் ஆத்மா சாந்தியடைய
   உலகத் தமிழர்களின் சார்பில்
   என்
   கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன்..!

* உன் ஒருவனின் உயிர் மூச்சில்
   ஓராயிரம் தமிழ்ச்செல்வன்களை
   எம்
   வீர தமிழச்சிகள்
   ஈன்றெடுப்பார்கள்
   ஈழப் பிறப்பிற்காக..!


* கயவர்களின் கழுகுப் பார்வையில்
   நீ
   எப்படி சிக்குண்டாய்?
   எம் ஈழவேந்தனே.!


* தொலைக்காட்சி செவ்வியிலே
   உன்
   புன்னைகை முகத்தில்
   தமிழீழம் கண்டோமடா
   தமிழ்ச்செல்வனே..!


* உன் அரசியல் பார்வையினை
   உலகமே வியந்ததடா..!
   அனுபவ முதிர்ச்சியில்
   ஆதிக்க சக்திகள் நடுங்கியதடா..!
   அன்புத் தோழனே.!


* தோல்விகள் எமக்கு புதிதல்ல..
   உன்
   வீர மரணம் புதிய வரலாறு
   படைக்க போகிறது..!

* புரியவில்லை கயவர்களுக்கு
   காட்டுமிராண்டிகளின்
   கூடாரம் சிதைந்து போகும்
   காலம்
   வெகு தூரமில்லை..! தோழா..!


* கால் நூற்றாண்டு விடுதலைப் போரில்
   உன்
   காலடித் தடங்கள்
   வீரத் தழும்புகளாய்
   எம் இதயவரைக்குள்..!


* மறக்க முடியாத
   நினைவலைகள்- எம்
   உறக்க நிலையில் கூட
   உன்
   அழகிய புன்னகை
   தலாட்டுகிறது தமிழ்செல்வனே..!

* செஞ்சோலைக் குருதியில் நனைந்த
   பிஞ்சு உள்ளங்களின்
   ஆறாத் துயரம்- மீள்வதற்குள்
   மீண்டும் உன் இழப்பு- எமக்கு
   தாங்க முடியவில்லையடா..!


* உடல் பிரிந்தாலும்
   உன்
   உயிரும் உணர்வும்
   ஈழ மைந்தர்களின் இதயத்தில்
   உறங்காத ஓசையாய்…!


* ஈழ மலர்ச்சியின்
   எழுச்சிப் போருக்கு
   நீ- கொடுத்த
   உயிர்த் தியாகத்திற்கு
   ஈடு இணையேதுமில்லை தோழா..!


* நீ- சிந்திய ஒவ்வொரு
  குருதித் துளியிலும் துளிர்த்தெழும்
  எழுச்சி விருட்சங்களுக்கு- எமது
  வீர வணக்கங்கள்.


                                          ஆற்றாமையோடும்....,
                                           மீளாத்துயரோடும்....,
                                           குவைத்திலிருந்து
                                           தமிழவன்

வியாழன், 29 அக்டோபர், 2009

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்- 1967 - 2.11.2007

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்
1967 - 2.11.2007


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.

1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்

1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய - 02″ எதிர்ச்சமரிலும்

முதன்மையானதாக இருந்தது.

மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்

காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்

ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.

ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.

“ஒயாத அலைகள் - 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.

தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.

மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன் அரசியல் என்றால் புன்னகைதான் என்பதை உலகத்துக்கே உணர்த்திய புன்னகை மன்னன் நீள் துயில் கொள்ளுகிறார். மாவீரம் மகத்தானது.
ஆதாரம்: சங்கமம்

திங்கள், 26 அக்டோபர், 2009

நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் புதுவை இரத்தினதுரை




புதுவையின் ஆழ வரிகளை ஒரு முறை நின்று கேளுங்கள்


ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை - போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர்.

“இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்

எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”

“துயரம் அழுவதற்காக அல்ல... எழுவதற்காக


- இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை…


”அட மானுடனே!

தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்

பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்

நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.

அன்னை மடியில் இருந்து கீழிறங்கி

அடுத்த அடியை நீ வைத்தது

தாயகத்தின் நெஞ்சில்தானே.

இறுதியில் புதைந்தோ

அல்லது எரிந்தோ எருவாவதும்

தாய்நிலத்தின் மடியில்தானே.

நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்

பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்

ஆதலால் மானுடனே!

தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”

வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை, தனது பதினான்காவது வயதில் கவிதை எழுத தொடங்கி, முப்பத்தேழாவது வயதில் (1935) விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர், ஒரு சிற்பக் கலைஞரும் கூட.


“எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பில் நான் வரவில்லை. ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில் கலைப் பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது. இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என உறுதியுடன் கூறிவந்த புதுவை இரத்தினதுரை, ”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம் எங்கு வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்” என்கிறார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை படித்தும், கவிதைப் பாடல்களை கேட்டும் பலநூறு இளைஞர்களும், இளைஞிகளும் விடுதலைப் படையினில் வந்து சேர்ந்து “மண் மீட்புக்காக” களமாடிக் கொண்டிருப்பதை சென்னையில் என் அண்டை வீட்டில் வாழும் ஈழத் தமிழ் நண்பர் யொனி, சொல்ல கேட்கும் பொழுது - கவிஞரின் “கவிதாயுதம்” இருப்பதிலேயே உயர் கருவியாக மதிக்கப்பட்டு - மெய் சிலிர்க்க வைக்கிறது.

ஈழமண்ணில் தோன்றிய மிகச்சிறந்த ஆய்வாளர்களும் ஒருவரான பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள், புதுவை இரத்தினதுரை கவிதைகள் பற்றி குறிப்பிடும்பொழுது,

“...இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்

எல்லைகள் மீறி யார் வந்தவன்.

நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து

நின்றது போதும் தமிழா - உந்தன்

கலைகள் அழிந்து கவலை மிகுந்து

கண்டது போதும் தமிழா இன்னும்

உயிரை நினைத்து உடலை சுமந்து

ஓடவா போகிறாய் தமிழா...”

என நெருப்பாக தொடங்கி நீளும் ஒரு பாட புதுவை இரத்தினதுரை எழுதியுள்ளார். அந்த பாடல் வரிகள் எத்தகைய தாக்கத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன் - ஈழத்திலுள்ள திருநல்வேலி சந்தியில் 1993இல் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் ஒருவர் தேநீர் குடித்துவிட்டு, சுருட்டு பற்ற வைத்துக்கொண்டு குளிருக்காக தலையையும் காதையும் மறைத்து தான் போட்டிருந்த போர்வையுடன் மிதிவண்டியில் ஏறிய நேரத்தில் இந்தப் பாடலும், “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலும் ஒலிபரப்பாக மிதிவண்டியில் அப்படியே நின்றபடி கேட்டுவிட்டு சென்றார். புதுவை இரத்தினதுரையின் புரட்சிக் கருத்துக்களையும் நெகிழ்ச்சியான அனுபவங்கலையும் பாடலில் கேட்டு, உறைந்துபோன அந்த ஈழத் தமிழனின் செயலை கண்டு மனம் நெகிழ்ந்தேன்” என்று பூரிப்போடு கா.சிவதம்பி எழுதியுள்ளார்.

விரும்பி இடம்பெயர்வது வேறு - விரும்பாமல் வன்முறை செய்து இடம்பெற வைப்பதென்பது வேறு. புலம் பெயர வைப்பவன் - இறுதியில் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அவனை மன்னிக்கவே கூடாது என மனம் பதற வைக்கிறது புதுவை இரத்தினதுரையின் சில படைப்புகள்.


“ஊர் பிரிந்தோம்

ஏதும் எடுக்கவில்லை

அகப்பட்ட கொஞ்சம் அரிசி,

பருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து,

மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,

காற்றுப் போய்க்கிடந்த மிதிவண்டி,

காணியுறுதி,

அடையாள அட்டை அவ்வளவே,

புறப்பட்டு விட்டோம்.

இப்போ உணருகிறேன்

உலகில் தாளாத துயரெது?

ஊரிழந்து போதல் தான்.”

இந்த நிலை - அரை நூற்றாண்டாக... ஈழமண்ணில் தொடர்கிறது. இது நாளையும் தொடரும் என்கிற போது... சொல்லி புலம்ப சொற்களில்லை. இயலாமையால் மனம் மௌனமாகிறது.


“தம்பி பெஞ்சாதியின் தமையன் வீட்டில்

இரவில் பாய்விரிக்க எங்கு இடமிருந்தாலும்

அங்கு உடல் சரிப்பு.

வீட்டுக்காரரின் தூக்கம் கலையுமென

இருமலைக் கூட உள்ளே புதைப்பு

களவுக்கு வந்தவன் போல மனைவியுடன் கதைப்பு

கிணற்று வாளி தட்டுப்பட்டாலே படபடப்பு

ஒண்டுக்கிருத்தல்,

குண்டி கழுவுதல்

ஒவ்வொன்றையும் பயந்தபடி ஒப்பேற்றல்.”


இப்படி காலம் காலமாக சிதைந்தும் - மனம் சிதையாமல் இருப்பதெப்படி?. நம்பிக்கை. உண்மையின் மேல் ஈழத் தமிழர்கள் வைத்திருக்கும் பெரு நம்பிக்கை. இந்த நூற்றாண்டிற்கு மட்டுமல்ல - இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழனின் விடுதலைப் போராட்டத்திற்கான இந்த “எரிசக்தி” கையிருப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.


“இன்று நடை தளர்ந்தும்

நரை விழுந்தும் தள்ளாடும்

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய இளைஞர்களே!

வெள்ளைத் தோல் சீமான்கள்

வீடு திரும்ப மூட்டை கட்டியபோது

நீங்கள் ஏன் ஊமையானீர்கள்?”

என்று ஒரு ஞாயமான வினாவை தனது கவிதை மூலம் புதுவை இரத்தினதுரை எழுப்புகிறார். செய்யவேண்டிய வேலையை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்து விட்டால் தலைமுறைகள் ஏன் தத்தளித்தாடுகிறது என்று கேட்ட கவிஞர், இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் சுருக்கென சூடு வைக்க தயங்கவில்லை,


“உடல்கீறி விதை போட்டால்

உரமின்றி மரமாகும்

கடல் மீது

வலை போட்டால்

கரையெங்கும் மீனாகும்.

இவளின் சேலையைப் பற்றி

இந்தா ஒருவன்

தெருவில் இழுக்கின்றான்

பார்த்துவிட்டுப்

படுத்துறங்குபவனே!

நீட்டிப்படு.

உனக்கும் நெருப்பூட்டிக் கொளுத்த

அவனுக்கு வசதியாக இருக்கட்டும்.

‘ரோஷ’ நரம்பை

யாருக்கு விற்று விட்டுப்

பேசாமற் கிடக்கின்றாய்?”

இத்தகைய அற்புத படைப்பின் மூலம் - ஈழத் தமிழ்மக்களை போராட்ட களத்திற்கு செல்ல வழியமைத்தவர் புதுவை இரத்தினதுரை.


“......சும்மா காற்றில் பற்றியா இந்தத் தீ மூண்டது?

இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.

எத்தனை பேரைத் தீய்த்து

இந்த தீ வளர்த்தோம்.

எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்

அணைய விடக்கூடாது

ஊதிக்கொண்டேயிரு.

பற்றியெரியப் போகுதெனப் பதறுவர்

ஊதுவதை நிறுத்தி விடாதே

இந்தத் தீயின் சுவாலையிற்தான்

மண் தின்னிகள் மரணிக்கும்.”

மீண்டும் ஊரில் நுழைய - தெருவில் நடக்க - தன் வீட்டு நிழலில் களைப்பாற துடிக்கும் என் உறவு ஈழத்தமிழினத்திற்கு எப்போது விடிவுகாலம் பொறக்கும் என்று எண்ணும்படியாக துக்கம் தொண்டையை அடைக்க என்னை நிலைதடுமாற செய்தது புதுவை இரத்தினதுரையின் கவிதைகள். அவரின் படைப்பை மொத்தமாக ( நூல்: பூவரசம்வேலியும் புலுனிக் குஞ்சுகளும்; ஆசிரியர்: புதுவை இரத்தினதுரை; வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 432; விலை: ரூ.300) படித்து முடித்தபோது மண்ணைப் பற்றியும், மண்ணுக்கும் மனிதனுக்குமான பாசம் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும், உறவுப் பிரிவின் துயரங்களைப் பற்றியும், வாழ்க்கையின் உன்னதங்கள், அழகியலைப் பற்றியும், புரட்சியைப் பற்றியும், அறுந்துபோகாத உறுதியான நம்பிக்கைகள் எனக்குள்ளே கூடியிருப்பதை உணர்கிறேன்.


உண்மையான ஒவ்வொரு தமிழனிடமும் கவிதை மூலமாக புலம்பினார் புதுவை இரத்தினதுரை. மனித நேயமுள்ள உலகத்து மனிதர்களிடம் புலம்பினார். நெஞ்சு வெடித்து இனத்துக்காகக் கதறிய இந்த கவிஞனுக்கு என்ன சொல்ல போகிறது இந்த உலகம். பதறி துடிக்கும்போது கவனிக்காமல் போய் வழக்கம் போல் எழவுக்கு துக்கம் விசாரிப்பது போலவே இந்த பதிவையும் வருத்தத்தோடு எழுதுகிறேன்.

குறைந்த அளவு இரக்கத்தையாவது உலகம் காட்டியிருக்கக் கூடாதா ஈழமக்களுக்கு..?


என் வாழ்நாள் முழுவதும் உன்னை நினைத்து .......


ஈழக் கவியரசே

நீயும் என்ன

பாவம் செய்தாயோ

நானறியேன்

ஈழத்தமிழனாய்

நீ பிறந்ததை தவிர


எம்மின மக்களை

எவனும் மதிக்கவில்லை

இந்த உலகில்


சிங்களவனாவது

பறவாயில்லை

தமிழனை மிருகமாய்

மதித்து சுட்டுக்

கொல்கிறான்


ஈழக்கவியரசே

என்ன பாவம்

செய்தாயோ

நானறியேன்

ஈழத்தமிழனாய் நீ

பிறந்ததைத் தவிர


நீ கூவியதெல்லாம்

கவிதையானது

உன் கவி கேட்டவர்

கண்களில் கண்ணீரெல்லாம்

கடலானது


பிறந்த மண்

சுட்டிருந்தாலும்

விட்டுப் பிரிந்தால்

காலமெல்லாம் நின்று

வலிக்கும் மனமென்று

பாட்டில் அழுதவன் நீ


பாவி நீ


பக்கத்து நாட்டில்

பிறந்திருந்தால்


தமிழனை மறந்து

தமிழ் எழுதி இருந்தால் கூட

தமிழர்களே விழா எடுத்து

உனக்கு

விருது வழங்கி

பாராட்டு விழா நடத்தி இருப்பார்கள்


ஏன் புதுவை நீ அமெரிக்காவில்

மைக்கேல் யக்சனாய்

பிறந்து இறந்திருந்தால்


எத்தனை தமிழர்கள்

அழுது கவிதையால் உனக்கு

மறுமொழி போட்டு இருப்பார்கள்


படுபாவம் நீ

தமிழ்கவி உன்னை கொன்ற

சிங்களவன் துப்பாக்கி கூட

தான் சிரித்ததற்காய் ஒரு

தடவையாவது அழுதிருக்கும்


ஆனால்

நீ இறந்த தகவலை

கண்ணீரோடு பகிர்ந்த என்

கண்ணீரை துடைக்க கூட

ஒரு வார்த்தை இட இங்கு

எந்த தமிழனும் இல்லை

என்பதால்


ஈழத்தமிழன் நானும்

பாவம்தான்....


யாரும் உனக்கு

அனுதாப அஞ்சலி

தெரிவிக்காமல் போனாலும்

என் கண்ணீர் கவி எழுதினால்

அது உன் இறப்புக்காகத்தான்

இருக்கும்.




நன்றி
தொல்காப்பியன்
(இன்போதமிழ்)

செவ்வாய், 20 அக்டோபர், 2009

ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிவிட்டது? : பாரிஸ் 'ஈழநாடு'





வட்டுக்கோட்டையில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதாக சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட ஈழத் தமிழர்களது விடுதலைப் போர் புதிய பரிமாணங்களோடு புலம்பெயர் தேசங்களில் பலம் பெற்று வருகின்றது. இது சிங்கள தேசம் முற்றிலும் எதிர்பார்க்காத புதிய களமாக அமைந்துள்ளது.


விடுதலைப் புலிகளது இராணுவக் கட்டமைப்பை அழித்துவிட்டால், ஈழத் தமிழர்களின் விடுதலை வேட்கையை இல்லாமல் ஆக்கி விடலாம் என்பதே ராஜபக்ஷக்களின் கணிப்பாக இருந்தது. பிரபாகரன் அவர்களை மையப்படுத்தியே விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கி வந்ததால் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும் பிளவுகளும் உருவாகும் என்பதே சிங்களத்தின் கனவாக இருந்தது. அதற்கான பல சதிகாரர்களும் தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவ விடப்பட்டனர். பலவிதமான குழப்பங்கள் நிறைந்த செய்திகளும் வெளியிடப்பட்டன.

ஆரம்பத்தில் சிங்கள தேசம் எதிர்பார்த்தபடி புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும், சலசலப்புக்களும் உருவாகினாலும், அது வெகு விரைவாகவே தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் முறியடிக்கப்பட்டது. சிங்கள தேசத்தின் கொடூரங்கள் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப் பெற்றிருந்தால், இந்தக் குழப்பங்கள் நீடித்துச் சென்றிருக்கலாம். ஆனால், தொடர்ந்தே செல்லும் சிங்கள இனவாதக் கொடூரங்கள் வன்னி மக்களை வதை முகாமில் இட்டதன் மூலம்; ஒன்றிணைந்து போராடவேண்டிய அவசியத்தை புலம்பெயர் தமிழர்களுக்கு மேலும் மேலும் அவசியமாக்கியது.

தமிழீழ விடுதலையை வேகமாக முன்நகர்த்தும் பணிக்காக புலம்பெயர் தமிழர்கள் 'நாடு கடந்த தமிழீழ அரசு', 'உலகத் தமிழர் பேரவை' என்ற இரு அமைப்புக்களையும் இரு படை அணிகளாக முன்நிறுத்திச் செயற்பட, தமிழ் இளையோர் அமைப்புக்களும் போர்க் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆக மொத்தத்தில், 'ஐந்தாவது கட்ட ஈழப் போர்' புலம்பெயர் தேசங்களில் மையங்கொண்டுள்ளது என்றே கருதத் தோன்றுகிறது. ஆயுதம் ஏந்திய நான்கு கட்ட ஈழப் போர்களை விடவும் வீரியமாக இந்த ஆயுதம் ஏந்தாத போர் வீறு கொண்டு எழ ஆரம்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை புலம்பெயர் தேசங்கள் எங்கும் நடைபெற்ற சிங்கள அரசின் இன வன்முறைக் கொடுமைகளுக்கெதிரான போராட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டது இதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

தற்போது, நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் இடையே குழப்பத்தையும், போட்டியையும் உருவாக்கும் கைங்கரியங்களில் சிங்களக் கைக்கூலிகள் முனைந்து செயல்பட்டு வருகின்றனர். புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்த இரு அமைப்புக்களையும் இரு கண்களாக வளர்க்க முன் வந்துள்ள நிலையில், பதவி ஆசை பிடித்த சிலர் இரு அமைப்புக்களுக்கும் இடையே போட்டிகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னர், தமிழீழத் தேசியத் தலைமையே புலம்பெயர் தேசத் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளை நெறிப்படுத்தி வந்தனர். அதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்மேல் புலம்பெயர் தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கையும், விடுதலைப் புலிகளின் வீரமும், தியாகமும் புலம்பெயர் தமிழர்களை விடுதலைப் புலிகள் பக்கம் அணி திரள வைத்திருந்தது. ஆனாலும், தீர்க்க தரிசனப் பார்வை கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முன்னதாகவே அடுத்த கட்ட விடுதலைப் போரை புலம்பெயர் தேசங்களை நோக்கி நகர்த்திவிட்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடிக்க இந்திய - சிறீலங்கா கூட்டுப் போர் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே இருந்தன. இந்த கூட்டு எதிர் சக்திகளிடம் சரணடைவது அல்லது விடுதலைப் போரைத் தொடர்ந்து நடாத்தி, அந்த அர்ப்பணிப்பு மூலம் அதனைப் புலம்பெயர் தமிழர்களிடம் கையளிப்பது என்ற தெரிவில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமது இலட்சியத்தைக் கைவிட மறுத்து இறுதிவரை களமாடினார். அதற்கு முன்னதாகவே, கடந்த வருட மாவீரர் தின உரையில் புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் போராட்டத்தை ஒப்படைத்திருந்த அவரது தீர்க்க தரிசனம் மெய் சிலிர்க்க வைப்பதாக உள்ளது.

இந்த நிலையில், புலம்பெயர் தேசங்களில் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த இரு போராட்ட அமைப்புக்களும் கத்திமீதான பயணத்திற்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதையில் கொஞ்சம் சறுக்கினாலும் கால்கள் அறுபடும் அபாயம் உள்ளதை அவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். இவர்களது தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தை நெறிப்படுத்தும் பொறுப்பில் புலம் பெயர் தமிழர்களே உள்ளார்கள். இதில் எங்கு பிழை நேர்ந்தாலும், அதற்குக் காரணமானவர் மக்களால் தூக்கி எறியப்படும் சாத்தியம் பலமானதாகவே உள்ளது.

ஏற்கனவே, உலகத் தமிழர் பேரவையினரின் நாடு தழுவிய அமைப்புக்கள் ஜனநாயக உரிமை கொண்ட அமைப்பாளர் தெரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இரு வருட கால ஆயுள் கொண்ட இதன் நிறைவேற்று அமைப்பை அந்தந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களே ஜனநாயக முறைப்படி தெரிவு செய்வார்கள் என்பதை யாப்பு ரீதியாகப் பதிவு செய்துள்ளார்கள். மாறும் தலைமை முறை கொண்ட இந்த அமைப்பு முறை தவறுகளுக்கு இடம் கொடுக்காது திறமைகளுக்கே இடம் கொடுக்கின்றது. பெரும்பாலும், நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பும் இவ்வாறான யாப்பு மூலமான உரிமைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம், இந்த இரு அமைப்புக்களும் தமிழீழ விடுதலைப் போரை மக்கள் பலத்துடன் முன் நகர்த்திச் செல்ல முடியும்.

நாங்கள் போகும் பாதை எதுவாக இருப்பினும் இலக்கு என்பது தெளிவானதாக இருக்க வேண்டும். இலக்குத் தவறிய பயணம் ஒட்டு மொத்த தமிழீழ மக்களையும் மீண்டும் புதைகுழிக்கே அழைத்துச் செல்வதாக முடியும். தமிழீழ தேசியத் தலைவரது தமிழீழம் என்ற இலக்கில் சமரசம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வட்டுக்கோட்டை வரை முள்ளிவாய்க்கால் வரை அத்தனை இழப்புக்களையும் தமிழினம் தாங்கிக்கொண்டது தமிழீழம் என்ற இலட்சியத்திற்காகவே. அதில் சமரசம் செய்யும் எந்த முயற்சியிலும் யாரும் ஈடுபட முடியாது என்பது இறுதியான, உறுதியான முடிவாகும்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் புலம்பெயர் தேச தமிழீழ மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஐந்தாம் கட்ட ஈழப் போரை வேகமாக முன்னெடுத்து தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பணியையே இந்த அமைப்புக்களின் தலைமைகள் முனைந்து செயற்படுத்த வேண்டும். அல்லது அவர்கள் தமது பொறுப்புக்களிலிருந்து விலகி இலட்சியத்தை முன்னெடுக்கும் தகுதி உள்ளவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

நன்றி: பாரிசு ஈழநாடு

புதன், 14 அக்டோபர், 2009

கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு 'இந்தியத் துரோகம்'!

ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளவோ, தமிழகத்தின் எழுச்சியை அலட்சியப்படுத்தவோ முடியாத தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தடீர் உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து அண்ணா சமாதியின் முன்பாக அமர்ந்துகொண்டார்.

கலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்த அடுத்த சில கால் மணி நேரங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, படுக்கை விரிக்கப்பட்டு, குளிரூட்டிகள் கொண்டுவரப்பட்டு, தலைமாட்டில் மனைவியாரும், கால்மாட்டில் துணைவியாருமாக அமர்ந்து கொண்டனர்.
கலைஞர் அவர்களது உண்ணாவிரதச் செய்தி டெல்லிக்குப் பறந்தது. மூன்று மணி நேரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்த கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். தமிழகம் அமைதியானது.

அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள்.

நடந்தேறிய கொடுமைகள் அனைத்தும் உலக நாடுகளை உலுக்கி எடுத்தது. மனிதாபிமானம் கொண்ட நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிங்கள அரசால் நடாத்தி முடிக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் எழுப்பின. காந்தி தேசம் அதை எதிர்த்தது. காந்தி தேசத்துடன் சீனாவும், பாக்கிஸ்தானும் ஒன்று சேர்ந்து போர்க் குற்ற விசாரணைக்குத் தடை போட்டது.

இத்தனை அவலங்களும் நிகழ்ந்தேறியபோது தமிழகத்தில் மாண்புமிகு முதலசை;சராக கலைஞர் கருணாநிதி அவர்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார். தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான தி.முக. அணியும், சுதர்ஷன நாச்சியப்பன் தலைமையிலான காங்கிரஸ் அணியும் தமிழகத்தில்தான் இருந்தனர். வன்னி மக்களின் அவலங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவ்வப்போது நீலிக் கண்ணீர் வடிக்கப்பட்ட போதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ராஜபக்ஷவுக்கு விருது வழங்காத குறையுடன் அவ்வப்போது பாராட்டுதல்களை அள்ளி வழங்கினார்கள்.

நடைபெற்று முடிந்த யுத்தமும், தொடரும் வன்னி மக்களின் அவலமும், கடத்தல்களும், தமிழினப் படுகொலைகளும் மேற்குலகின் மனிதாபிமானத்திற்கு விடப்பட்ட சவாலாகவே தோற்றம் பெற்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த நாடுகளால், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி மேற்குலகை ஆட்கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டங்களும் புலம்பெயர் தேசங்களின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கியது. இது இதுவரை இந்தியா மேற்கொண்டுவந்த இலங்கை தொடர்பான சுயலாபக் கொள்கைக்கும் சவாலாகவே அமைந்துவிட்டது.

மேற்குலகினதும், அமெரிக்காவினதும் தற்போதைய சிறிலங்கா தொடர்பான கொள்கை மாற்றம் ஈழத் தமிழர்களை இந்திய ஆதரவுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்கள் பாதை விலகிச் செல்வது இந்திய இராஜதந்திரத்திற்குக் கிடைத்த முதல் அடியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள். இதனால், ஈழத் தமிழர்களை மீண்டும் தம்மை நம்ப வைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது.

இதுவே, தற்போதைய தமிழக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இலங்கைப் பயணமாக அமைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை நாராயணனும் மேனனும் சிறிலங்கா சென்று காட்சிகள் மாறாமல் பார்த்துக் கொண்டது போல், இப்போது தமழீழ மக்கள் மாற்றம் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்காக தமிழக உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவும் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய மூன்று மணி நேர உண்ணாவிரதம் போன்றதே. எதுவும் நடைபெறாமலேயே இந்தக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் வெற்றிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள்.

தமிழகத்தில் தற்போது தி.மு.க. வை எதிர்த்து நிற்கக்கூடிய அணி ஒன்று இல்லை என்றே கருதப்படுகின்றது. அ.தி.மு.க. அணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி கழன்று விட்டது. செல்வி ஜெயலலிதா அடிக்கடி காட்டிவரும் அகோர முகத்தினாலும், விவேகமற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களே சலிப்புற்றுப் போயுள்ளார்கள். இந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் சில சட்டமன்ற உறுப்பினர்களையும் பெறுவதானால், தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரை எதிர்த்து சுயமாக உண்மைகளைப் பதிவு செய்ய முடியாது. எனவே அவரது பயணமும் ஒரு சுற்றுலாவாகவே முடியப் போகின்றது.

சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக் கதை வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார். தமிழீழம் என்ற வார்த்தையையே தமது அகராதியிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தீவினுள் வாழ்வதற்காகத் தமிழர்களைச் சமரசம் செய்வதே இந்தக் குழுவின் பணியாக இருக்கும். இது ஈழத் தமிழர்களை மீண்டும் புதை குழிகளுக்குள் அனுப்பும் இந்திய முயற்சியாகவே இந்தப் பயணம் நோக்கப்படுகின்றது.
நன்றி - ஈழநாடு

தமிழ்த் தேசியத்தின் அபிலாசைகள்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: நாடு கடந்த அரசாங்கம்: ஓர் ஆய்வு - தமிழ்நெற்




தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக தம்மைக் கூறுகின்ற தமிழர் தேசியக் கூட்டணி அல்லது பிற அரசியல் கட்சிகள் என்பன இந்தியாவை அல்லது மகிந்த ராஜபக்சாவை அல்லது எந்தவொரு அதிகார வர்க்கத்தையும் திருப்திப்படுத்துவதற்காக மக்களின் இந்த ஆணையிலிருந்து விலகிவிட்டதாக வெளிப்படையாகக் கூற உரிமை அற்றவர்கள் என தமிழநெற் இணையத்தளம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:

மிருகத்தனமான இராணுவ வெற்றியும், மனிதத்தன்மையற்ற தடுத்து வைத்தல்களும் ஈழத் தமிழர்களின் தேசிய அபிலாசைகளை மறக்கச் செய்துவிடும் என்பது கொழும்பினதும், அதிகார வர்க்கங்களினதும் நம்பிக்கை. அதுவே அவர்களின் போர் மார்க்கத்துக்கான தூண்டுதலாகவும் அமைந்தது.

ஆனால் போரும் அதற்குப் பின்னாலான போக்கும் ஈழத்தமிழர்களுக்கு தமது நாட்டின் விடுதலையானது முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அவசியம் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டுள்ளது என்பதை அவர்கள் ஒருவரும் இன்னும் அறியவில்லை.

ஆனால் ஆணவமும், பேராசையும் காரணத்தை ஒரு போதுமே பார்க்காது. இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடகத்தில் சில அதிகாரவர்க்கத்தினர் மிகவும் நேர்மையாக உள்ளார்கள். அவர்கள் சர்வதேசத்தின் அனைத்து தலையீடுகளுக்கும் செவிமடுத்து கருத்துக் கூறுகிறாரகள். தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழர்களின் நிலங்களையும் அவர்கள் வளங்களையும் அபகரிப்பதில் அவர்களுக்குள்ள பேராசையை அவர்கள் ஒருபோதுமே மறைக்கவில்லை.

அவர்களில் ஒருவர், தமிழ் அரசியல் தலைவர்கள் தமது மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து குரல் எழுப்பக் கூடாது என்று வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார். தாம் கூறும் தீர்வுக்கு தமிழ் அரசியல்வாதிகள் தலையாட்ட வேண்டும் எனவும் மிரட்டப்படுகிறார்கள் என்பதையும் அவர் ஏற்றுக் கொள்கிறார். வேறொரு அதிகார அமைப்பும் அங்கு உள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்காக அவர்கள் இப்போது கண்ணீர் சிந்துகிறார்கள், இலங்கையின் ஒற்றுமைக்காக வேறுபாடுகளைக் களைந்து தீர்வு காணப்பட வேண்டும் என ஆலோசனை கொடுக்கிறார்கள், வெளிநாட்டில் புலம்பெயர்ந்துள்ளவர்கள் கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள், இந்த நாடகத்தில் தாமும் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக இரஜதந்திர மற்றும் பொருளாதார அழுத்தங்கள் கொடுப்பது போல தம்மைக் காட்டிக்கொள்கிறார்கள்.

முதலாவது வகை அதிகார அமைப்பினர், தமிழர்கள் படும் அவலங்களுக்கு தமது பொறுப்பை அடையாளம் காணாத நிலையில், பிந்திய வர்க்கத்தினர் குறைந்தது மறைமுகவாகவேனும் அதை அறிந்துள்ளதோடு உடனடியாக தேவைப்படுகின்ற சில மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்தும் கோரிக்கை விடுகின்றனர்.

எனினும், இவர்களில் எவருமே கொழும்பின் இன அழிப்பு போக்கை மாற்றுவதில் ஒரு சிறிய அளவு மாற்றத்தைக் கூட இதுவரை ஏற்படுத்த திராணியற்றவர்களாக உள்ளனர். மாறாக, கொழும்பானது தனது சிங்களத்துக்குரிய சர்வாதிகாரப் போக்கின் சகல வடிவங்களையும் நாட்டில் மிக வேகமாக உருவாக்குகிறது.

நாட்டிலுள்ள தற்போதைய உண்மை நிலையானது நிரந்தர அமைதி, ஜனநாயக உரிமை, வேறுபாடுகள் களையப்பட்ட இறுதியான அரசியல் தீர்வு மற்றும் பிராந்திய உலகளாவிய கூட்டுறவு எனபனவற்றுக்காக நாட்டைப் பிரிப்பதே தற்போதைய தேவை என்பதை அனைவரினதும் அறிவும், உணர்வும் அவர்களுக்கு தெளிவாக உணர்த்தும்.

ஆனால் இலங்கையிலுள்ள தமிழ் தேசியத்தின் அபிவிருத்தியிலும், கோரிக்கைகளிலும் உள்ள முக்கியத்துவத்தை, நியாய நேர்மையைக் கண்டறிய வேண்டும் என எந்தவொரு அதிகாரங்களும் விரும்பவில்லை என்பதை தமிழர்கள் மிக அவதானமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். தற்போது இலங்கையில் உள்ளது ‘இனப்பிரச்சனை'. அதற்கு இன வேறுபாடுகளைக் களைந்து தீர்வு காண்பதும், அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளைக் பேணுவதற்கு கொழும்பின் மீது சிறிதளவு சர்வதேச அழுத்தம் ஏற்படுத்துவது என்பவற்றின் மூலம் எளிதாகக் தீர்த்துவிடமுடியும், ஆனால் தேசிய விடுதலை என்பது பயங்கரவாதத்தின் கோரிக்கை என்று நாங்கள் ஏற்றுக்கொண்டு நம்ப வேண்டும் என இலங்கை அதிகார வர்க்கங்கள் விரும்புகின்றன.

இந்த நோக்கங்களிற்கு பின்னால் என்ன உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும், அதாவது அறிவான அரசியல் சிந்தனைகள் இல்லை என்பதையும் வெறும் அதிகார சந்தர்ப்பவாதம் தான் என்பதையும் அனைவரும் அறிவார்கள். தாம் செய்யும் எதுவுமே நாட்டின் பிரச்சனையைத் தீர்க்கப்போவதில்லை என்பதை அதிகாரத்திலிருப்பவர்கள் முற்றுமுழுதாக அறிந்துள்ளனர்.

தமது மனப்போக்கின் நேர்மையில் இவர்களுக்கு நம்பிக்கை இருந்தால், இலங்கையில் மீண்டும் ஒரு ஆயுதப் புரட்சி வெடிக்கும் என்பது பற்றி அவர்கள் கவலை கொள்ள வேண்டிய தேவை இல்லை. இதில் அவர்கள் காட்டும் அதீத அக்கறையானது, அவர்களின் நடவடிக்கைகள் தப்பானவை என்பதை எடுத்துக் காட்டுகிறது. புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்துக்கு ஆதரவளித்து வருகிறார்கள் என்று கூறிய எம்.கே நாராயணனின் அண்மைக்கால அவதானிப்புகளில் இருந்து இந்தியாவின் குற்றமுள்ள நெஞ்சிலிருந்து கிளம்பியுள்ள பயத்தைக் கண்கூடாகக் கண்டு கொள்ளலாம்.

இவர்கள் எல்லோருமே தமிழர்கள் அரசியல் ரீதியாகப் போராட வேண்டும் என்று அறிவார்ந்த ஆலோசனை கூறுகிறார்கள். ஆனால் இதிலுள்ள கபடத்தனம் என்னவென்றால், ஜனநாயக முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளில் கூட, தமிழர்கள் தமது விடுதலை வேட்கையைக் கைவிட்டு இலங்கையின் கூற்றுக்குத் தலையசைக்குமாறு வற்புறுத்தப்படுவதாகும்.

சுருக்கமாகச் கூறினால், ‘தோற்கடிக்கப்பட்ட தமிழர்களுக்கு' என்ன தேவை என்று ஜனநாயக முறைப்படி சொல்லக் கூட அரசியல் உரிமைகள் கிடையாது என்பதாகும். இந்த இடத்தில் தான் இலங்கையில் உள்ள தமிழர்களும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் உறுதியான ஒரு நிலைப்பாட்டைக் எடுத்து அதனை ஆணித்தரமாக வலுவான குரலில் அறிவிக்க வேண்டும்.

இறுதியாக 1977 இல் தமிழர்கள் ஜனநாயக முறைப்படி தமது குரல்களை உயர்த்திய போது, தமது தாயகத்தில் அதாவது இலங்கையின் வடக்கு, கிழக்கில் சுதந்திரமான, கௌரவமான தமிழீழ உருவாக்கத்துக்கான தெளிவான, அடக்கிக்கொள்ளமுடியாத ஆணையை தமது சுய தீர்மானத்தின் அடிப்படையில் எடுத்திருந்தனர்.

தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக தம்மைக் கூறுகின்ற தமிழர் தேசியக் கூட்டணி அல்லது பிற அரசியல் கட்சிகள் என்பன இந்தியாவை அல்லது மகிந்த ராஜபக்சாவை அல்லது எந்தவொரு அதிகார வர்க்கத்தையும் திருப்திப்படுத்துவதற்காக மக்களின் இந்த ஆணையிலிருந்து விலகிவிட்டதாக வெளிப்படையாகக் கூற உரிமை அற்றவர்கள்.

புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைத்து தமிழர்களும் ஏற்றுக் கொள்ளும் புதிய அரசியலமைப்பு வரும்வரை, எமது அடிப்படைகளைக் தொலைக்காமல் அவர்கள் விவாதங்களில் ஈடுபடலாம். இதுவே இப்போதுள்ள புதிய ஒரு நிலைப்பாடாகும். சொல்வதைக் கூறுமாறு உத்தரவு போடுகின்ற கொழும்பு மற்றும் புதுடில்லிக்கு வெளியே சுதந்திரமான ஜனநாயக நாடுகளில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

எனவே தமிழர்களின் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவதில் இவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி உள்ளது. ஜனநாயக முறையில் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழ் ஈழம் மற்றும் முன் நிபந்தனையாக தேவைப்படுகின்ற வட்டுக்கோட்டை அரசியலமைப்பு மேலும் அடித்தள ஜனநாயக அமைப்பைத் தோற்றுவித்தல் என்பன குறித்து தமிழ் நெற் இணையத்தளம் நீண்ட நாட்களூக்கு முன்னர் எழுதியிருந்தது.

கடந்த புதன்கிழமை பி.பி.சியில் நாடு கடந்த தமிழீழம் குறித்த முன்மொழிவை உருத்திரகுமாரன் வழங்கியிருந்தார். அதில் அவர் தாய்நாடு மற்றும் சுய தீர்மானம் பற்றி மட்டுமே பேசியமை கவலைக்குரியது. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மிக முக்கிய பகுதிகள் துண்டிக்கப்ப்ட்டிருந்தமை வருத்தமளிக்கிறது.

"நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" என்னும் சொற்தொடரானது தமிழர்களின் மிகுதி அபிலாசைகளையும் உள்ளடக்குவதாக இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வட்டாரங்கள் கூறின. ஆனால் ‘தமிழ் நாடு' என்னும் சொற்தொடர் இந்தியாவிலுள்ள சகலதையும் குறிக்காது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்கள் ஜனநாயக ரீதியில் என்ன ஆணையை வழங்கினார்கள் என்பதை கூறுவதில் ஏன் தயக்கம்? இதைத் தடுப்பது யார்? நாடுகடந்த அரசாங்கம் என்பது அடையாளச் சின்னமாக செயற்படுகின்ற ஒரு அமைப்பாகும், எனவே இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் சுதந்திரத்தையும், கௌரவத்தையும் இப்போது தாங்கி நிற்கின்ற புலம்பெயர் தமிழர்களின் சுதந்திரமான ஆதரவுகளுடன் அது அமைக்கப்படுவது அவசியம்.

அனைத்து அரசாங்கங்களும் இதனை கருத்திலெடுக்காத பட்சத்தில் ஜனநாயக ரீதியில் அமைக்கப்படும் மாற்று அரசாங்கமே இது. சமரசப்பேச்சுக்களால் உடன்படிக்கை போடும் நோக்கத்துடன் மட்டுமே இது ஆரம்பிக்கப்படும் என்றால், நாடுகடந்த அரசாங்கத்தின் முழு கருதுகோளுமே தவறாக வழிநடத்தப்படும். சமரச பேச்சுகளின் உடன்படிக்கைகளுக்கான மேடை இதுவல்ல. தமிழர்கள் தமது அபிலாசைகளை வெறுமனவே ‘ஜனநாயக ரீதியில்' தெரிவித்தார்கள் என்று காட்ட வேண்டிய தேவை இல்லை.

ஏனெனில் சமரசப் பேச்சுக்களுக்கான முன் நிபந்தனையாக இதை எடுக்க சில அதிகார வர்க்கங்கள் விரும்புகின்றன. கொழும்பு மற்றும் சில அதிகார வர்க்கங்கள் வழங்கியுள்ள அழுத்தத்தில் வாக்காளர் பதிவு மேற்கொள்ளுமாறு அழைக்கப்பட்டிருப்பது நாடு கடந்த அரசாங்கம் குறித்த அறிவித்தலிலுள்ள பாதுகாப்பற்ற மற்றொரு நடவடிக்கையாகும்.

தமிழ் மக்களை படுகொலை செய்வதில் சர்வாதிகார சிங்கள அரசாங்கம் இந்த வாக்காளர் பதிவை எவ்வாறு பயன்படுத்தியது என்பதை அனைவரும் அறிவார்கள். வாக்காளர் பதிவை மையப்படுத்தி ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரை மட்டுமே பதிவுகள் மேற்கொள்ளச் செய்யும், நாடுகடந்த அரசாங்கம் உண்மையான பிரதிநிதித்துவமாக இருக்காது.

வாக்காளர் பதிவுகள் மேற்கொள்ளப்படாமல், புலம்பெயர்ந்து நோர்வே நாட்டிலுள்ள தமிழர்களிடையே இந்த மே மாதத்தில் நடைபெற்ற வெற்றிகரமான வாக்குப்பதிவைப் பற்றிக் கருத்தில் எடுக்க வேண்டும். கடந்த புதன்கிழமை நாடு கடந்த அரசாங்கத்தின் முன்மொழிவின் போது கூறப்பட்ட ‘தாய்நாடு' என்ற பதம்பற்றி பி.பி.சி இன் செய்தியாளர் கருத்திலேயே கொள்ளவில்லை.

இராணுவ தோற்கடிப்புக்குப் பின்னர், வெற்றிகரமாகச் செயற்படாது என்று பல அவதானிகளால் கருதப்படுகின்ற தனி தாய்நாடு என்பதிலேயே இப்போதும் இந்த குழு தெளிவாக ஒட்டியுள்ளது" என்று பி.பி.சி செய்தியாளர் கூறியுள்ளார். புதிய மற்றும் உள்ளடக்கப்பட்ட மாதிரியுடன் இந்த அரசாங்கம் உருவாக்கப்படும் போது, முயற்சிகளை பிரதிபலிக்கும் பிரதிவிம்பமாக அது இல்லை.

புலிகளின் திட்டம் என்று முன்பே உருவாக்கப்பட்டுள்ள பிரதி விம்பத்தையும் தாண்டி நாடுகடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் செல்ல வேண்டும். பி.பி.சி இன் கருத்துப்படி சுதந்திரமான நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களின் ஜனநாயக நடவடிக்கைகளில் ஒரு தலையீடும் கொள்ள வேண்டிய தேவை இல்லாதபோதும், கொழும்பு அரசாங்கமானது உருத்திரகுமாரனைக் கைது செய்வதிலேயே இப்போது குறியாக உள்ளது.

நாடுகடந்த அரசாங்கத்தை வெற்றிகரமாக அமைப்பதற்கான சிறந்த தேர்வு, அதை மேல்மட்டத்திலிருந்து ஆரம்பிக்காமல், அடித்தளத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதாகும். இவ்வாறான அரசானது எவருடைய பயமுறுத்தல்களுக்கோ, ஊழல்களுக்கோ உள்ளாக மாட்டாது. ஏனெனில் அது புலம்பெயர் மக்களிடத்தில் எல்லா இடங்களிலும் முதன்மை பெற்று வியாபித்திருக்கும்.

சுதந்திர, கௌரவ தமிழீழம் அமைக்கும் நோக்கில் ஒரு ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுக்கான கவுன்சிலை அமைப்பது குறித்து நோர்வேயிலுள்ள ஈழத்தமிழர்க்ள் ஏற்கனவே கலந்துரையாடி உள்ளனர். இதில் 99 வீதமான தமிழ் வாக்காளர்கள் தமது ஆணையைக் கொடுத்துள்ளனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில்கள் சகல நாடுகளிலும் இருந்தால், நாடுகடந்த அரசாங்கம் அமைப்பதற்கான கருவியாக அவை தொழிற்படும்.

அது அதிக பிரதிநிதித்துவ, ஜனநாயக, பாதுகாப்பான மற்றும் சக்தி வாய்ந்ததாக அமையும். நாடுகடந்த அரசாங்கம் தோன்றுவதற்கு முன்னர் கூறப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிரதான குறிக்கோளை மீண்டும் ஆணணயிடுதலானது ஜனநாயக முறையிலான அரசாங்கத்தின் குறிக்கோள்களை நிச்சயமான வழிமுறைகளில், ஒவ்வொருவரையும் சந்தேகத்துக்கிடமின்றி அல்லது மறுப்புக்கிடமின்றி சமாதானப்படுத்தி அமைப்பதற்கு மிக முக்கியமானது.

நன்றி: தமிழ்நெற்

திங்கள், 12 அக்டோபர், 2009

அக்:10-இரண்டாம் லெப்.மாலதி- 22 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் – தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்




எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 22 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள்.  இன்று தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்.

பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது.

வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர்.

வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது? ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு? இந்தக் கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழவேண்டும். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் திறன் புதிய தலைமுறைக்கு உண்டு.

மனிதகுல வரலாற்றில் கிறிஸ்துவுக்கு 6000 (ஆறாயிரம்) ஆண்டுகளுக்கு முன் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. காடுகளில் குழந்தைகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். பெண்ணே பெரிதாக மதிக்கப்பட்டாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தன்னுடைய இனத்தைக் காக்கும் சக்தியாக பெண் விளங்கினாள். அவளின் சக்திக்கு கட்டுப்பட்டு பின்னால் செல்ல அவளது சமூகம் தயாராகவிருந்தது அன்று. தனது இனத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும், தாயானவள் தன்னைப் பலி கொடுக்கவும் தயாராகவிருந்தாள் என்பது உயர்ந்த தியாகமாகும். அது அன்றே இருந்தது.

எதிரிகளிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தனது இனத்தை காக்க தானே தலைமை தாங்கி வழி நடத்தினாள். பஞ்சாயத்து சபையை நிறுவி நிர்வாகம் செய்தாள்.

அன்றைய பெண்ணும் போர் முனைகளைச் சந்தித்தவள்தான். எதிரிக் குழுக்களை தாக்க, வேட்டையாட தானே ஆயுதங்களைக் கொண்டு முன்னே சென்று தாக்குவாள். அந்த தாய்க்குப் பின்னால் தான் அவளது குழுவைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் வருவார்கள். சண்டை செய்வார்கள். சாவைச் சந்திப்பார்கள். வெற்றி பெறுவார்கள்.

மலைகளின் மீது மான்களைப் போன்று ஏறி எதிரியை விரட்டவும், தேனை எடுக்கவும் அந்தப் பெண்களால் முடிந்தது. தேன் குடிக்க கரடி ஏற முடியாத இடத்தில் கூட ஏறி நின்று தேன் குடிப்பாள் வீரமங்கை. கல்லினால் கூரிய ஆயுதம் செய்யவும், தோலினால் கருவி செய்யவும், பாத்திரம் செய்யவும், அழகிய குடிசை கட்டவும், நடனமாடவும் அந்தப் பெண்களால் முடியும்.

எலும்பாலும், கல்லாலும், மரத்தாலும், கொம்பாலும் செய்யப்பட்ட விதம் விதமான கூரிய ஆயுதங்களால் பெண்கள் சண்டை போட்டார்கள். தமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதிரிகளை தேடி, தேடி தாக்கி அழித்தார்கள். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் பெண்கள் சாம்ராஜ்யமாகவே இருந்தது. அக்காலத்தில்தான் சமூகம் முழுவதும் ஒரே குடும்பமாகவிருந்தது என ஆய்வாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இதனை மெய்ப்பிப்பது போல அகழ்வாராய்வின்போது மிகப் பழமையான காலத்து வரலாற்று ஆவணங்களில் சக்தி வழிபாட்டு முறை இருந்து வந்துள்ளதை சுட்டுகின்றனர்.

உலகில் சரிபாதியினர் பெண்கள், எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் போராட்டத்தில் பங்கு பெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேசவிடுதலையும் முழுமை பெறாது என்பது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கருத்தாகும். அடக்கு முறையின் வடிவமாக பெண்ணை ஆளாக்கியுள்ள நமது சமூகம் அந்தத் தளையை அறுக்க முன்வரவில்லை. பெண் ஒடுக்குமுறைக் கருத்துகள் இன்னமும் பலமான நிலையில் பேசப்படுகின்றன. அவ்வாறான சமூக கட்டமைப்பு எழுதப்படாத வாக்கியமாக நிலைத்து நிற்கிறது.

சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் பெண்கள் அதிலே புதையுண்டு போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

தமிழரது வாழ்வில் அடிமைத்தனம் என்பது பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்நியப் படையெடுப்புகளால் தமிழரது கலாசாரம் பண்பாடு என்பன சிதையுண்டு போயுள்ளன.

தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஆரியப்படைகளுக்கு தமிழன் அஞ்சியோடவில்லை. ஆனால் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி ஆரிய சக்கரவர்த்திகள் தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு அஸ்தமனமாகவிருந்தது. அவர்கள் போட்ட விதைதான் பெண்ணடிமை, சீதனம், சாதிமுறை, குலதொழில் என்பன. இன்றுகூட இந்தியாவில் பெண்கள்படும் இழிவுநிலை ஏராளம். இந்திய ஆதிக்கம் ஈழத்திலும் நிலை கொண்டதனால் ஈழப்பெண்களும் இதுபோன்ற அடக்கு முறைக்கு ஆளாகினர்.

அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துகள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதி சமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையையும், சாதியக் கட்டமைப்புக்களையும் இறுக்கமாகப் பின்னிப்பிணைத்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுதப்பட்டிருந்தது. அது சுய சிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கிறோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் என்றுமில்லாதவாறு எம்மண்ணில் தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.

எனவே விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம்.

இவ்வாறுதான் எமது போராட்டத்தில் பெண் புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கிறார்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி விவாதங்களை புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றைவிட எமது பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

உலகில் பெண்கள் மோசமான அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ளனர். இற்றைக்கு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாய்வழிச் சமூக அமைப்பு சிறப்புற்று விளங்கியது. அதன்பின், கால வெள்ளத்தில் தாய் வழி சமூக அமைப்பு முறைகள் பல்வேறு காரணிகளால் சிதைந்துபோய் ஆணாதிக்க முறைமைகள் தோற்றம் பெற்றன. இன்றும் உலகில் பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். மேற்காசியா, ஆபிரிக்கா மற்றும் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் பெண்களின் உரிமைகள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஆரியர்களின் மனுதர்ம சாஸ்திரம் பெண்களுக்கு எதிராக சமூக நீதிகளை அதிகரிக்க செய்திருக்கின்றன. சாதியம், அடிமைத்தனம் போன்றவற்றை ஆழப்பதித்திருக்கின்றன. வரதட்சனை, இரத்த உறவு திருமணம், கொடுமை, சித்திரவதை, உயிர் நீப்பு என பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம்.

எகிப்து நாட்டை தாலமி அயோலேட்டஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகள் கிளியோபாட்ரா! தாலமி இறப்பதற்கு முன் அவள் தம்பி ஏழாவது தாலமி, சகோதரி கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆளவேண்டுமென அறிவித்தார். அதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 16. தாலமிக்கு வயது 10. இது ஒரு செய்தியல்ல. 20 நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இப்படி பெண்ணியல் பற்றி பெண்ணுரிமை பற்றி, யாரும் வாய் திறக்கவில்லை. அப்போதும் பெண் அடிமைதான். இப்போதும் பெண் அடிமைதான் எகிப்து நாட்டில்.

அக்டோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும் ஆகும். அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறனர். தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்.

ஐம்பது வருட கால ஆக்கிரமிப்புக்கும் முப்பது வருடகால கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து வருகிறார்கள்.

தலைவர் பிரபாகரனின் காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தம்மை வளர்த்தது மட்டுமன்றி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தும் வருகிறார்கள்.
தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.

அதிகாரப் போக்கினாலும், ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத வெறியினாலும், தமிழர்களின் ஜனநாயக உரிமை நசுங்கியது. ஆனால் இளைய பெண் தலைமுறை சுதந்திர வேட்கை கொண்டு விடுதலைக்காக ஆயுதக் கருவிகளை கையிலேந்தி தீர்த்த தீரமான வேட்டுக்களாலே இன்று ஜனநாயகம் மலர்ந்தது மட்டுமல்ல, பெண்ணினத்தின் விடுதலையும் முழுமை பெற்றது. ஆண் பெண் சமநிலை புத்துயிர் பெற்றுள்ளது.

2ஆம் லெப். மாலதி 22 ஆண்டுகளுக்கு முன் அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது. 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.

நன்றி: ஊடகம்

தமிழகத்து தொப்பிள்கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழர்களின் இதயம் கனத்த மடல்!

இந்திய – சிறிலங்கா கூட்டுச் சதிக்கு முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் இழந்துவிட்டு, யுத்தக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வதை முகாம்களுக்குள் வாழ்விழந்து போயுள்ள ஈழத் தமிழர்கள் மூன்று இலட்சம் பேர் சார்பாகவும் இந்த மடலை உங்களுக்கு எழுத நேர்ந்ததற்காக வேதனைப் படுகின்றேன்.

உலகம் முழுவதும் திரண்டு வந்தாலும் நீங்கள் உடன் இருக்கிறீர்கள் என்ற எங்களது கர்வம் இப்போது எங்களிடம் இல்லை. இப்போதெல்லாம் அந்த எண்ணத்தை எங்கள் மனதிலிருந்து முற்றாகத் துடைத்தெறிந்துவிட்டோம். நாங்கள் எங்களுக்கான பாதையை வகுப்பதில் உங்கள் குறித்த எங்கள் அதீத நம்பிக்கையே எங்களை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிட்டது.

இந்தியாவில் தமிழகம் இருக்கிறது என்ற யதார்த்தத்தை மறந்துவிட்டு, தமிழகம் எங்களோடு இருக்கிறது என்று நாங்கள் உங்களை அளவுக்கு அதிகமாகவே நம்பிவிட்டோம். எங்கள் எதிரியின் கைகளில் கிளிநொச்சி வீழ்ந்தபின்னர் நாங்கள் உங்கள் மீதான உச்ச நம்பிக்கையுடன்தான் முள்ளிவாய்க்கால் வரை அத்தனை அவலங்களையும் தாங்கியவாறு ஓடிக்கொண்டிருந்தோம். உங்கள் திசையை நோக்கியே எங்கள் குரல்களை ஓங்கி எழுப்பினோம்.

முத்துக்குமாரன் மூட்டிய தீயும், பின்னவர்களின் தியாகங்களும் எங்கள் மனங்களை உருக்கியது. எங்களுக்கு நம்பிக்கை ஊட்டியது தமிழகம் எங்களுக்காகப் பெங்கி எழுமென்று உண்மையாகவே நாங்கள் நம்பிவிட்டோம். எங்களது தியாக வேள்விக்கு அடித்தளம் இட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். தமிழர்கள் ஆளும் உரிமை உள்ளவர்கள் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களது போர்ப் பறை இந்திய – சீன யுத்தத்துடன் முடிவுக்கு வந்தாலும் எங்கள் செவிகளில் இப்போதும் அது ஒலித்துக் கொண்டே உள்ளது.

ஆம்! ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை?’ என்று எங்கள் உணர்ச்சிக் கவிஞரும் அண்ணாவை நினைவு கூர்ந்தார். எங்கள் போதாத காலம் அண்ணா அவர்களது ஆயுள் அத்தனை குறைவாகப் போய்விட்டது. உங்களுக்குத் தெரியுமா… எங்கள் தலைவரின் ஆத்மார்த்த குரு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என்பது? ஆம்! வெள்ளையர்களுக்கு காந்தியின் அகிம்சை புரிந்தது. இந்தியாவுக்கு அது புரியவில்லையே! இந்திய அமைதிப் படை என்ற போர்வையில் இலங்கைத்தீவை ஆக்கிரமிக்க வந்த இந்தியப் படை, இந்திய அரசின் பிராந்திய வல்லாதிக்க கனவுகளை ஏற்றுக்கொள்ளாமல் இந்தியாவின் எதிரிகளுடன் உறவாடிய சிறிலங்காவைத் தாஜா செய்ய எங்களைப் பலிக்கடா ஆக்கியபோது எங்களது திலீபனும் காந்தியைத்தான் நம்பினார்.

அவரது காந்தியப் பாதை இந்தியாவுக்குப் புரியாமலே போய்விட்டது. காந்தியின் அகிம்சையை நம்பிய திலீபன் அந்த காந்திய தேசத்தால் படுகொலை செய்யப்பட்டான். காந்தி தோற்றுப்போய் காணாமல் போனதனால், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களது பாதை மட்டுமே எங்களுக்கு மீதியாக இருந்தது. இப்போதெல்லாம் எங்களுக்குத் தத்துவம் போதிப்பவர்கள், அந்தக் காந்தியவாதி திலீபன் தோற்றபோது எங்கே போனார்கள்? விடுதலைப் புலிகள் விரும்பி ஆயுதம் ஏந்தவில்லை. காலம் அவர்கள் கைகளில் ஆயுதங்களைக் கையளித்தது. சிங்கள இனவாத சிந்தனைகளால் விரக்தியடைந்திருந்த எங்களது இளைஞர்கள் கைகளில் இந்தியா ஆயுதங்களைக் கைகளில்’ வழங்கியது.

இந்தியாவின் எதிரிகள் பக்கம் நின்ற சிறிலங்காவை நிர்ப்பந்தம் செய்வதற்காக சிங்கள – தமிழ் முரண்பாட்டை நன்றாகவே பயன்படுத்தியது உங்கள் இந்திய தேசம். எங்கள் கைகளில் ஆயுதங்களை வழங்கி சிங்களத்திற்கு எதிராக எங்களைப் போராட வைத்தது. இளைய வயதான எங்களுக்கு அறிவை விடவும் உணர்வே மேலோங்கி நின்றதனால் எங்களுக்கு இந்திய தேசத்தின் சதி எதுவுமே புரியவில்லை. அப்போதும் எமது தாய்த் தமிழகமே எங்களது அறிவுக் கண்களை மறைத்து நின்றது.

தமிழகத்தை எங்கள் தாயாக நினைத்தோம். நம்பினோம். பிள்ளையை அழ விடுவாளோ தாய்? எங்களை அழிய விடுமோ தமிழகம்? நாங்கள் நம்பியிருந்தோம் எங்களைக் காப்பாற்ற தமிழகம் புயலாக மாறும் என்று. எங்களைக் காப்பாற்ற தமிழகம் எதற்கும் தயாராகுமென்று. ஆனாலும் முத்துக்குமாரனாலும் தமிழகத்தை முழுமையாக எழுச்சி கொள்ள வைக்க முடியவில்லை. எங்களுக்காகப் போராடவும் நீங்கள் சார்ந்திருந்த கட்சியிடம் அனுமதி கோரினீர்கள். எங்களுக்காக அழுவதற்கும் உங்கள் சாதித் தலைமையிடம் உத்தரவு கேட்டுக்கொண்டிருந்தீர்கள்.

நாங்கள் அழியும்போது கண்ணீர் விட்ட நீங்கள் எங்களுக்காக உங்கள் அணிகளை விட்டு விலகிப் போராடத் தயாராகவில்லை. உங்கள் அணிகளின் தலைவர்கள் ஏற்கனவே சிங்களத்தால் விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்ற உண்மைகள் உங்களுக்குத் தெரியாமலே போய்விட்டது. நாங்கள் அனாதரவாக்கப்பட்டு, கொலைக்களத்தில் நின்று கொண்டிருந்த வேளையிலும் உங்கள் தலைவர்கள் மனமிரங்க மறுத்துவிட்டார்கள். எங்கள் தேசம் எரிந்துகொண்டிருந்த வேளையில் உங்கள் மன்னர்கள் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் அழு குரல்களாலும், அபயக் குரல்களாலும் உங்கள் மனங்கள் புண்பட்டுப் போகாமல் உங்கள் தலைவர்கள் தங்களது தொலைக்காட்சி மூலமாக ‘மானாட, மயிலாட’ என்று மயக்கமுறும் காட்சிகளை வாரி வழங்கிப் பாரியையும் தோற்கடித்தார்கள். எங்களது இத்தனை இழப்புக்களுக்கும் யார் காரணம்? எங்களது இத்தனை அழிவுகளுக்கும் எது காரணம்? நாங்கள் உங்களை விட்டு விலக முடியாத கோழைத்தனத்தினால் எங்களை நாங்களே அழித்துக் கொண்டோம். உங்கள் மீதான எங்கள் பிரியத்தினால் இந்திய தேசத்தை எடுத்தெறிய எங்களால் முடியவில்லை.

நீங்கள் எங்களது தொப்பிள்கொடி உறவு என்பதால் நாங்கள் இந்திய தேசத்தால் விலை கூறி விற்கப்பட்டோம். நீங்கள் இந்தியர்களாக இருக்கும்வரை எங்கள் மண்ணில் இரத்த ஆறு ஓடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் தமிழர்களாக உங்களை உணரும்வரை எங்களது அழிவுகளை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. நாங்கள் வாழவேண்டும் என்ற ஆசை கூட உங்களது தேசபக்தியினால் சிதைக்கப்பட்டு விட்டது. எங்களை அழ்ப்பதற்காக சிங்கள தேசத்திற்கு அத்தனை உதவிகளையும் வழங்கிய இந்திய காங்கிரஸ் கட்சியை எத்தனை இடங்களில் தோற்கடித்தீர்கள்?

உங்கள் தேசத்தின் நலம் எங்கள் தேசியத்தைக் குலைக்குமானால் நாங்கள் உங்கள் நலனுக்காக எங்களை அழித்துக் கொள்ள இனியும் தயாராகப் போவதில்லை. நீங்கள் உங்கள் சுய சிந்தனையைத் தொலைத்து வெகு காலமாகிவிட்டது என்பதை நாங்களும் அறிவோம். இல்லையேல், அவலக் குரல்கள் எழுப்பியவாறு அபயங்கரம் நீட்டிவாறு உங்களிடம் வந்து சேர்ந்த ஈழ தேசத்தின் ஏதிலிகளை இப்படி அவல வாழ்க்கை வாழ அனுமதித்திருப்பீர்களா? சிங்கள தேசம் போலவே உங்களது அரசும் ஈழத் தமிழர்களை விசாரணைகள் எதுவும் இல்லாமல் ஈனத்தனமாக அடைத்து வைக்க அனுமதித்திருப்பீர்களா?

பாவம், ஈழத் தமிழர்களுக்கு இலங்கைத் தீவும் இந்தியத் தமிழகமும் ஒரே நீதியைத்தான் வழங்குகின்றது. வாழ அனுமதி மறுக்கபட்டுள்ள நாங்கள் இனியும் உங்கள் திசை நோக்கிக் கதறப் போவதில்லை. ஏனென்றால், நீங்கள் இந்தியர்களாக இருந்தே எங்களைத் தமிழர்களாக உணர்கின்றீர்கள். உங்கள் தேச பக்தியும் எங்கள் எதிர்காலமும் எப்போதும் ஒருமித்துப் பயணிக்கப் போவதில்லை. ஆதலால், நாங்கள் முடிவு செய்தே ஆகவேண்டும் உங்களுக்காக நாங்களா? அல்லது, எங்களுக்காக நாங்களா என்பதை.

ஆம்! உங்களுக்காக நாங்கள் இந்திய தேசத்தை நேசித்த காரணத்தால் எங்களுக்கெதிராக சீனாவும், பாக்கிஸ்தானும் சிங்கள தேசத்துடன் கூட்டுச் சேர்ந்தது. இந்திய தேசத்தின் வல்லாதிக்க கனவுக்கு நாங்கள் பலி கொள்ளப்பட்டோம். இந்திய தேசம் எங்களைப் பலிக்கடா ஆக்கிய கணத்தில் இந்தியா – பாக்கிஸ்தான் – சீனா என அத்தனை பகை நாடுகளும் ஒரே திசையில் அணிவகுக்கும் பெரும் பேற்றினைப் பெற்றுக் கொண்டன. பேரறிஞர் அண்ணா அவர்களது தமிழ்த் தேசியக் கனவு கலைஞர் கருணாநிதி அவர்களுக்குப் புரியவில்லையானாலும் அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

திரையுலகிலும் நாயகனாகவே தன்னை நிலை நிறுத்திய அந்த மாமனிதர் நிகழ் வாழ்விலும் ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்றே பெரு விருப்புற்றிருந்தார். எங்கள் துர்ப்பாக்கியம் ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்ய அஞ்சாத அந்த வீரத் திருமகனும் எம்மை விட்டு வெகு சீக்கிரமாக மறைந்துவிட்டார். பாவம், உங்களை எல்லாம் ஆளும் பொறுப்பை நீங்கள் கோழைத் தமிழனான கருணாநிதியிடமல்லவா கொடுத்துவிட்டிர்கள். தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே நேசிக்கத் தெரிந்த கலைஞர் கருணாநிதியிடம் எங்கள் அவலங்கள் எடுபடுமா?

சங்கத் தமிழையும் விற்றே பழக்கப்பட்டவர் ஈழத் தமிழர்களுக்கும் விலை நிர்ணயம் செய்யமாட்டார் என்று எப்படி நம்பினீர்கள்? நாங்கள் விலைகூறி விற்கப்பட்டோம். இந்திய அரசாலும், தமிழக அரசாலும் நாங்கள் விலை கூறி விற்கப்பட்டோம் என்பதை நீங்கள் அறிவீகளா? நாங்கள் அழிந்து கொண்டிருந்த போதும் கலைஞர் அவர்கள் இரக்கம் காட்டவில்லையே. நாங்கள் இறந்து கொண்டிருந்த வேளையிலும் கலைஞர் அவர்கள் கடிதம்தானே எழுதிக்கொண்டிருந்தார்.

அதை மீறி, அரைநாள் உண்ணாவிரதம் தானே இருந்து சாதனை செய்து எங்கள் வேதனையிலும் அரசியல் ஆதாயம் தேடினார். ஈழத் தமிழர்களின் ஒற்றுமையின்மை பற்றி ஒப்பாரி வைக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திராவிடர் முன்னேற்றக் கழகத்தை எத்தனை ஒற்றுமையுடன் கட்டிக் காத்தார்? அமரர் எம்.ஜி.ஆர். அவர்களை எப்படிப் பிரிந்து போக அனுமதித்தார்? தி.மு.க.வின் போர் வாளாக அறியப்பட்ட வை.கோ. அவர்களை எப்படி வெளியேற்றினார்?

பலதாரப் பிதாமகர் கருணாநிதி அவர்களுக்கும் அவரது அரசியல் எதிரியான செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் இடையே நிகழும் வார்த்தைப் போர் உலகப்பிரசித்தம் கொண்டது என்பதைக் கலைஞர் அறிவாரா? போதும் தமிழகமே! உனக்காக நாங்கள் இந்திய தேசத்தை நம்பியது போதும்! கிழக்கிலும், மேற்கிலும் எதிரிகள் பலம் பெற்ற போதும் தெற்கு வாசலில் உங்களுக்காக நாங்கள் தோத்தது போதும். உங்கள் எதிரி சீனா பாக்கிஸ்தானிலும் வங்காள தேசத்திலும், பூட்டனிலும், நேபாளத்திலும் நிலை கொண்ட போதும் இலங்கைத் தீவில் இன்றுவih எதிர்த் துருவமாக நின்றது நாங்கள் மட்டுமே.

சிங்கள தேசம் சீனாவுக்கு செங்கம்பளம் விரித்த போதும், எங்கள் இந்திய விசுவாசம் அதை எதிர்த்தே நின்றது. இந்தியாவுக்குப் பங்கம் வரக்கூடாது என்பதால்தான் எங்கள் தலைவன் சீனாவை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது, காலம் கடந்த ஞானம் பெற்றுவிட்டோம். எங்கள் தேசியத் தலைவர் இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்ற சிங்கள தேசத்துடன் உடன்பாடு செய்ததைப் போலவே, எங்கள் தேசியத்தையும் எங்கள் தேசத்து மக்களையும் காப்பாற்ற நாங்கள் சீனாவுடனும் சமரசம் செய்ய முடிவு செய்துவிட்டோம்.

உங்களுக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கள் எங்களுக்கு அழிவை மட்டுமே தந்தது. இப்போது எங்களுக்காக நாங்கள் எடுக்கும் முடிவினால், உங்கள் தேசமும் தேசியமும் சிதைவுறுமானால், அதற்கும் நீங்கள் மட்டுமே காரணம். ஏனென்றால், ஈழத் தமிழர்கள் இதற்கு மேலும் இந்தியத் துரோகங்களைத் தாங்கிச் சகிக்கமாட்டார்கள். தொப்பிள்கொடி உறவு என்ற பேதமையை வைத்து இந்திய அரசால் இனியும் விபச்சாரப் பிழைப்பு நடாத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

- நன்றி்: ஈழநாடு