எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

சனி, 14 நவம்பர், 2009

புதுயுகப் புரட்சி மலர்களுக்கு எம் வீரவணக்கம்.!


* தாய் நிலம் மீட்க

 தன்னையே ஈகை செய்த
 தற்கொடைப் பூக்களே..!
இப்புதிய பூமியின்-எம்
புரட்சி மலர்களே..!
எமது வீரவணக்கம்..!


* தமிழ்த் தாய்களின்
கருவறைகளில்
பேரினவாத வல்லூறுகளின்
வண்புணர்வின் வலிகள் பல
சுமந்து…..
பெண்மையின் மென்மை
துரத்தி….
பெரும் புயலாய் பெருக்கெடுத்து
கரும்புலியாய்
கறைகள் அழித்து
வரலாற்றை எமதாக்க-தம்
சுக வாழ்வினை அற்பணித்த
தியாகத் தீபங்களே..!
எமது வீரவணக்கம்..!


* தூர தேசங்களெங்கும்
கிளை பரப்பி- எமது
உரிமை மீட்புப் போருக்காய்
தூரத்து இடி முழக்கமாய்..,
கார்த்திகை மலர்களாய்..,
தமிழர் இதயமெங்கும் நிறைந்து
மலர்ந்து சிரிக்கும் மாவீரர்களுக்கு
எமது வீரவணக்கம்..!


* முள்ளிவாய்க்காலின்
 உதிரக் கடலில்
மூழ்கடிக்கப்பட்ட எம்
முத்துக்களிலிருந்து
வெடித்து கிளம்பும்
வீரிய விதைகளாக
இப் பிரபஞ்சமெங்கும்
விளைந்து நிற்போம்


* ஈழ மண்ணில்
வித்தான ஒவ்வோர்
மாவீரர்களின் விதையாய்
மண்முட்டி எழும்
மான மறவர்களின்
ஈழத்து எழுச்சி விருட்சங்களாய்
எழுந்து நிற்போம்
எதிர்த்து வரும்
பகை விரட்ட….!


* எம்மை மறித்து நிற்கும்
அடிமை விலங்கை
அறுத்தெறியும் பாதை நோக்கி
பயணித்த..,
உமது தடம் பற்றி
தொடர்வோம்……..!


* திறந்த வெளி கொட்டடியில்
அனாதரவான வனாந்தரங்களில்
ஆயுதங்கள் முறைத்து நிற்கும்
முள்வேலி முகாம்களை
நொறுக்கி விட
வீர சபதமேற்போம்..!


* நீர் ஏந்திய சுடரை
ஏற்றிப் பிடிப்போம்..!
அணையா விளக்காய்.,
ஈகைச்சுடரை இதயத்தில்
சுமப்போம்…!


வீரவணக்கம்…! வீரவணக்கம்…!! வீரவணக்கம்…!!!


--குவைத்திலிருந்து…
  தமிழவன்

விடுதலைப் பாவலர் அய்யா புதுவை இரத்தினதுரை- மண் சுமந்தோர் கனவு.!


துயிலுமில்ல விதைப்பொன்றின் பின்னர்

வீடு திரும்பினேன்
படுக்கை விரித்து விழ சாமக்கோழி கூவிற்று
வித்துடல் தோளேற்றி நடந்ததால்
வலித்தது தோளும் மனமும்
தூக்கம் தொலைவாகிப் போனது.
கவிதையயான்று எழுதலாம்
எழுதலாம்தான் எப்படித் தொடங்குவது?
எழுதிச் சென்று எங்கே முடிப்பது?
பாட்டெழுதிப் பாட்டெழுதி
நான்படும் துயர் யாரறிவார்?
கூட்டுக்குள் கிடந்து குமைகின்றது உயிர்
பூ அள்ளிப்போட்டே புண்ணானது கைகள்
நிதம் அழுதழுது
நீர் வற்றிப்போனது விழிகள்
கண்மலரும் காலை ஒவ்வொன்றும்
வீரச் சாவுடன்தானே விடிகின்றது.
இமை மூடும் பொழுதும்
இடி விழுத்தித்தானே இருள்கிறது
நிலவு முகந்திருத்திய நிர்மலப் பூங்கொடிகளை
இழவு எடுத்துச் செல்கின்றது நாளாந்தம்
எத்தனைக் காலத்துக்கென்றுதான் இது?
பத்துப் பரப்பில் விதைக்கத் தொடங்கி வயல்
ஏக்கர் கணக்காக நீள்கிறது இன்று.
விதைக்க குழிதோண்ட வியர்க்கிறது நிலம்
காற்றின் விழிகளிலும் துயரம்.
வெள்ளையடித்த கல்லறைக்குள்ளே
பள்ளிகொள்கின்றனர் பரமாத்துமாக்கள்
நூல்பிடித்து ஓடிய நேராய்
வரிசையான நாற்று நடுகை
எல்லாம் முளைக்குமெனும் எதிர்பார்ப்பு
பொய்க்கவில்லை
கங்கும் களையுமாக எங்கும் அரும்புகள்
ஒருநாள் வந்து
உள்ளே புகுந்து ஒரு பூ வைத்துப்பாரும்
குழியிலிருந்து கேட்கும் குரல்
பார்க்கும் விழி
துடிக்கும் உயிர்
எவர் சொன்னது இவர்களை இறந்துபோனவர் என்று?
எவர் சொன்னது எலும்பும் உக்கி எருவானார் என்று?
வெளியே வருவதில்லையே தவிர
குழிக்குள்ளேயே ஒரு ராஜாங்கமே நடக்கிறது
கார்த்திகை இருபத்தேழு
தேசத்திற்கு உயிர்ப்பெழுதும் நாள்
சில்லிட்டுப்போகும் நிலம்
பூக்கொண்டு நடப்போம் புனிதரிடம்
மெல்ல அருகமர்ந்து
கல்லறைகள் கழுவுவோம் கண்ணீரால்
நெய்விளக்கு ஏற்றும் நேரம்
செல்வங்கள் விழிதிறப்பர்
செவிகேட்க சிரிப்பர்.
மெளன மொழியில்
பெற்றமனம் குறிப்பேவர்
அதில் ஆயிரம் அர்த்தங்கள் அவிழும்
“மொழியாகி எங்கள் மூச்சாகி” என்று
என்புருக வழியும் பாடலில்
சிலிர்த்துப்போய் சிலையாவோம்.
பணிமுடித்து உறங்குகின்றோம்
மீதி வழி முன்செல்வீர் என
தேவகுமாரனின் அசரீரி கேட்கும்
எமக்கானது பூவல்ல
எமக்கானது சுடரல்ல
எமக்கானது இந்தப்பாடல் மட்டுமல்ல
எமக்கானது விடுதலை
எமக்கானது தேசத்தின் விடிவு
காற்றிலேறும் இந்தப் பேரொலியுடன்
கல்லறைகள் மூடிக்கொள்ளும்
ஒளிபெறும் திசையில் பாதை தெளிவுறும்
வாசல் கடந்து வெளியேவர
நிலம் விரிந்திருக்கும்
எம் பயணம் தொடரும்
மண்மடிந்தோர் கனவு நனவாகும்வரை.



பின் குறிப்பு:

எரிமலை 2009 சனவரி-பெப்ரவரி இதழிலிருந்து இப்பாடலை எடுத்தளிக்கிறோம். அதில் காணப்பட்ட அச்சுப் பிழைகளை நீக்கிச் சரி செய்ய உதவிய கவிஞர் கி.பி. அரவிந்தன், புலவர் இறைக்குருவனார் ஆகியோருக்கு நன்றி.

நன்றி: கீற்று இணையவழி சமூக நீதித் தமிழ்தேசம் திங்களிதழ்