சனி, 14 நவம்பர், 2009

புதுயுகப் புரட்சி மலர்களுக்கு எம் வீரவணக்கம்.!


* தாய் நிலம் மீட்க

 தன்னையே ஈகை செய்த
 தற்கொடைப் பூக்களே..!
இப்புதிய பூமியின்-எம்
புரட்சி மலர்களே..!
எமது வீரவணக்கம்..!


* தமிழ்த் தாய்களின்
கருவறைகளில்
பேரினவாத வல்லூறுகளின்
வண்புணர்வின் வலிகள் பல
சுமந்து…..
பெண்மையின் மென்மை
துரத்தி….
பெரும் புயலாய் பெருக்கெடுத்து
கரும்புலியாய்
கறைகள் அழித்து
வரலாற்றை எமதாக்க-தம்
சுக வாழ்வினை அற்பணித்த
தியாகத் தீபங்களே..!
எமது வீரவணக்கம்..!


* தூர தேசங்களெங்கும்
கிளை பரப்பி- எமது
உரிமை மீட்புப் போருக்காய்
தூரத்து இடி முழக்கமாய்..,
கார்த்திகை மலர்களாய்..,
தமிழர் இதயமெங்கும் நிறைந்து
மலர்ந்து சிரிக்கும் மாவீரர்களுக்கு
எமது வீரவணக்கம்..!


* முள்ளிவாய்க்காலின்
 உதிரக் கடலில்
மூழ்கடிக்கப்பட்ட எம்
முத்துக்களிலிருந்து
வெடித்து கிளம்பும்
வீரிய விதைகளாக
இப் பிரபஞ்சமெங்கும்
விளைந்து நிற்போம்


* ஈழ மண்ணில்
வித்தான ஒவ்வோர்
மாவீரர்களின் விதையாய்
மண்முட்டி எழும்
மான மறவர்களின்
ஈழத்து எழுச்சி விருட்சங்களாய்
எழுந்து நிற்போம்
எதிர்த்து வரும்
பகை விரட்ட….!


* எம்மை மறித்து நிற்கும்
அடிமை விலங்கை
அறுத்தெறியும் பாதை நோக்கி
பயணித்த..,
உமது தடம் பற்றி
தொடர்வோம்……..!


* திறந்த வெளி கொட்டடியில்
அனாதரவான வனாந்தரங்களில்
ஆயுதங்கள் முறைத்து நிற்கும்
முள்வேலி முகாம்களை
நொறுக்கி விட
வீர சபதமேற்போம்..!


* நீர் ஏந்திய சுடரை
ஏற்றிப் பிடிப்போம்..!
அணையா விளக்காய்.,
ஈகைச்சுடரை இதயத்தில்
சுமப்போம்…!


வீரவணக்கம்…! வீரவணக்கம்…!! வீரவணக்கம்…!!!


--குவைத்திலிருந்து…
  தமிழவன்

விடுதலைப் பாவலர் அய்யா புதுவை இரத்தினதுரை- மண் சுமந்தோர் கனவு.!


துயிலுமில்ல விதைப்பொன்றின் பின்னர்

வீடு திரும்பினேன்
படுக்கை விரித்து விழ சாமக்கோழி கூவிற்று
வித்துடல் தோளேற்றி நடந்ததால்
வலித்தது தோளும் மனமும்
தூக்கம் தொலைவாகிப் போனது.
கவிதையயான்று எழுதலாம்
எழுதலாம்தான் எப்படித் தொடங்குவது?
எழுதிச் சென்று எங்கே முடிப்பது?
பாட்டெழுதிப் பாட்டெழுதி
நான்படும் துயர் யாரறிவார்?
கூட்டுக்குள் கிடந்து குமைகின்றது உயிர்
பூ அள்ளிப்போட்டே புண்ணானது கைகள்
நிதம் அழுதழுது
நீர் வற்றிப்போனது விழிகள்
கண்மலரும் காலை ஒவ்வொன்றும்
வீரச் சாவுடன்தானே விடிகின்றது.
இமை மூடும் பொழுதும்
இடி விழுத்தித்தானே இருள்கிறது
நிலவு முகந்திருத்திய நிர்மலப் பூங்கொடிகளை
இழவு எடுத்துச் செல்கின்றது நாளாந்தம்
எத்தனைக் காலத்துக்கென்றுதான் இது?
பத்துப் பரப்பில் விதைக்கத் தொடங்கி வயல்
ஏக்கர் கணக்காக நீள்கிறது இன்று.
விதைக்க குழிதோண்ட வியர்க்கிறது நிலம்
காற்றின் விழிகளிலும் துயரம்.
வெள்ளையடித்த கல்லறைக்குள்ளே
பள்ளிகொள்கின்றனர் பரமாத்துமாக்கள்
நூல்பிடித்து ஓடிய நேராய்
வரிசையான நாற்று நடுகை
எல்லாம் முளைக்குமெனும் எதிர்பார்ப்பு
பொய்க்கவில்லை
கங்கும் களையுமாக எங்கும் அரும்புகள்
ஒருநாள் வந்து
உள்ளே புகுந்து ஒரு பூ வைத்துப்பாரும்
குழியிலிருந்து கேட்கும் குரல்
பார்க்கும் விழி
துடிக்கும் உயிர்
எவர் சொன்னது இவர்களை இறந்துபோனவர் என்று?
எவர் சொன்னது எலும்பும் உக்கி எருவானார் என்று?
வெளியே வருவதில்லையே தவிர
குழிக்குள்ளேயே ஒரு ராஜாங்கமே நடக்கிறது
கார்த்திகை இருபத்தேழு
தேசத்திற்கு உயிர்ப்பெழுதும் நாள்
சில்லிட்டுப்போகும் நிலம்
பூக்கொண்டு நடப்போம் புனிதரிடம்
மெல்ல அருகமர்ந்து
கல்லறைகள் கழுவுவோம் கண்ணீரால்
நெய்விளக்கு ஏற்றும் நேரம்
செல்வங்கள் விழிதிறப்பர்
செவிகேட்க சிரிப்பர்.
மெளன மொழியில்
பெற்றமனம் குறிப்பேவர்
அதில் ஆயிரம் அர்த்தங்கள் அவிழும்
“மொழியாகி எங்கள் மூச்சாகி” என்று
என்புருக வழியும் பாடலில்
சிலிர்த்துப்போய் சிலையாவோம்.
பணிமுடித்து உறங்குகின்றோம்
மீதி வழி முன்செல்வீர் என
தேவகுமாரனின் அசரீரி கேட்கும்
எமக்கானது பூவல்ல
எமக்கானது சுடரல்ல
எமக்கானது இந்தப்பாடல் மட்டுமல்ல
எமக்கானது விடுதலை
எமக்கானது தேசத்தின் விடிவு
காற்றிலேறும் இந்தப் பேரொலியுடன்
கல்லறைகள் மூடிக்கொள்ளும்
ஒளிபெறும் திசையில் பாதை தெளிவுறும்
வாசல் கடந்து வெளியேவர
நிலம் விரிந்திருக்கும்
எம் பயணம் தொடரும்
மண்மடிந்தோர் கனவு நனவாகும்வரை.



பின் குறிப்பு:

எரிமலை 2009 சனவரி-பெப்ரவரி இதழிலிருந்து இப்பாடலை எடுத்தளிக்கிறோம். அதில் காணப்பட்ட அச்சுப் பிழைகளை நீக்கிச் சரி செய்ய உதவிய கவிஞர் கி.பி. அரவிந்தன், புலவர் இறைக்குருவனார் ஆகியோருக்கு நன்றி.

நன்றி: கீற்று இணையவழி சமூக நீதித் தமிழ்தேசம் திங்களிதழ்

வெள்ளி, 30 அக்டோபர், 2009

ஈழ வேந்தனுக்கு எம் இதய அஞ்சலி- வீர வணக்கம்.!

(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர்  சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவினை தழுவிய செய்தியறிந்து அந்நிமிடமே நான் தீட்டிய கண்ணீர் கவிதை- இன்றும் எம் மக்களின் மாறா அதே நிலை.........!.)



* என் இனிய தோழா..!

   நீ
   புதைக்கப்பட வில்லை
   விதைக்கப்பட்டிருக்கிறாய்..!

* விடுதலை வேட்கையில்
   உன்
   எரிதழல் ஏந்தி
   வீறு கொண்டெழும் தமிழினம்..!


* உன் ஆத்மா சாந்தியடைய
   உலகத் தமிழர்களின் சார்பில்
   என்
   கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன்..!

* உன் ஒருவனின் உயிர் மூச்சில்
   ஓராயிரம் தமிழ்ச்செல்வன்களை
   எம்
   வீர தமிழச்சிகள்
   ஈன்றெடுப்பார்கள்
   ஈழப் பிறப்பிற்காக..!


* கயவர்களின் கழுகுப் பார்வையில்
   நீ
   எப்படி சிக்குண்டாய்?
   எம் ஈழவேந்தனே.!


* தொலைக்காட்சி செவ்வியிலே
   உன்
   புன்னைகை முகத்தில்
   தமிழீழம் கண்டோமடா
   தமிழ்ச்செல்வனே..!


* உன் அரசியல் பார்வையினை
   உலகமே வியந்ததடா..!
   அனுபவ முதிர்ச்சியில்
   ஆதிக்க சக்திகள் நடுங்கியதடா..!
   அன்புத் தோழனே.!


* தோல்விகள் எமக்கு புதிதல்ல..
   உன்
   வீர மரணம் புதிய வரலாறு
   படைக்க போகிறது..!

* புரியவில்லை கயவர்களுக்கு
   காட்டுமிராண்டிகளின்
   கூடாரம் சிதைந்து போகும்
   காலம்
   வெகு தூரமில்லை..! தோழா..!


* கால் நூற்றாண்டு விடுதலைப் போரில்
   உன்
   காலடித் தடங்கள்
   வீரத் தழும்புகளாய்
   எம் இதயவரைக்குள்..!


* மறக்க முடியாத
   நினைவலைகள்- எம்
   உறக்க நிலையில் கூட
   உன்
   அழகிய புன்னகை
   தலாட்டுகிறது தமிழ்செல்வனே..!

* செஞ்சோலைக் குருதியில் நனைந்த
   பிஞ்சு உள்ளங்களின்
   ஆறாத் துயரம்- மீள்வதற்குள்
   மீண்டும் உன் இழப்பு- எமக்கு
   தாங்க முடியவில்லையடா..!


* உடல் பிரிந்தாலும்
   உன்
   உயிரும் உணர்வும்
   ஈழ மைந்தர்களின் இதயத்தில்
   உறங்காத ஓசையாய்…!


* ஈழ மலர்ச்சியின்
   எழுச்சிப் போருக்கு
   நீ- கொடுத்த
   உயிர்த் தியாகத்திற்கு
   ஈடு இணையேதுமில்லை தோழா..!


* நீ- சிந்திய ஒவ்வொரு
  குருதித் துளியிலும் துளிர்த்தெழும்
  எழுச்சி விருட்சங்களுக்கு- எமது
  வீர வணக்கங்கள்.


                                          ஆற்றாமையோடும்....,
                                           மீளாத்துயரோடும்....,
                                           குவைத்திலிருந்து
                                           தமிழவன்

வியாழன், 29 அக்டோபர், 2009

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்- 1967 - 2.11.2007

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்
1967 - 2.11.2007


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.

1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.

அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

படைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்

1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய - 02″ எதிர்ச்சமரிலும்

முதன்மையானதாக இருந்தது.

மேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்

காரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்

ஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.

1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.

ஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.

“ஒயாத அலைகள் - 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.

தன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

தாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

அமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.

மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன் அரசியல் என்றால் புன்னகைதான் என்பதை உலகத்துக்கே உணர்த்திய புன்னகை மன்னன் நீள் துயில் கொள்ளுகிறார். மாவீரம் மகத்தானது.
ஆதாரம்: சங்கமம்

திங்கள், 26 அக்டோபர், 2009

நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் புதுவை இரத்தினதுரை




புதுவையின் ஆழ வரிகளை ஒரு முறை நின்று கேளுங்கள்


ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை - போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர்.

“இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்

எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”

“துயரம் அழுவதற்காக அல்ல... எழுவதற்காக


- இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை…


”அட மானுடனே!

தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்

பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்

நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.

அன்னை மடியில் இருந்து கீழிறங்கி

அடுத்த அடியை நீ வைத்தது

தாயகத்தின் நெஞ்சில்தானே.

இறுதியில் புதைந்தோ

அல்லது எரிந்தோ எருவாவதும்

தாய்நிலத்தின் மடியில்தானே.

நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்

பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்

ஆதலால் மானுடனே!

தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”

வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை, தனது பதினான்காவது வயதில் கவிதை எழுத தொடங்கி, முப்பத்தேழாவது வயதில் (1935) விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர், ஒரு சிற்பக் கலைஞரும் கூட.


“எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பில் நான் வரவில்லை. ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில் கலைப் பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது. இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என உறுதியுடன் கூறிவந்த புதுவை இரத்தினதுரை, ”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம் எங்கு வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்” என்கிறார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை படித்தும், கவிதைப் பாடல்களை கேட்டும் பலநூறு இளைஞர்களும், இளைஞிகளும் விடுதலைப் படையினில் வந்து சேர்ந்து “மண் மீட்புக்காக” களமாடிக் கொண்டிருப்பதை சென்னையில் என் அண்டை வீட்டில் வாழும் ஈழத் தமிழ் நண்பர் யொனி, சொல்ல கேட்கும் பொழுது - கவிஞரின் “கவிதாயுதம்” இருப்பதிலேயே உயர் கருவியாக மதிக்கப்பட்டு - மெய் சிலிர்க்க வைக்கிறது.

ஈழமண்ணில் தோன்றிய மிகச்சிறந்த ஆய்வாளர்களும் ஒருவரான பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள், புதுவை இரத்தினதுரை கவிதைகள் பற்றி குறிப்பிடும்பொழுது,

“...இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்

எல்லைகள் மீறி யார் வந்தவன்.

நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து

நின்றது போதும் தமிழா - உந்தன்

கலைகள் அழிந்து கவலை மிகுந்து

கண்டது போதும் தமிழா இன்னும்

உயிரை நினைத்து உடலை சுமந்து

ஓடவா போகிறாய் தமிழா...”

என நெருப்பாக தொடங்கி நீளும் ஒரு பாட புதுவை இரத்தினதுரை எழுதியுள்ளார். அந்த பாடல் வரிகள் எத்தகைய தாக்கத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன் - ஈழத்திலுள்ள திருநல்வேலி சந்தியில் 1993இல் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் ஒருவர் தேநீர் குடித்துவிட்டு, சுருட்டு பற்ற வைத்துக்கொண்டு குளிருக்காக தலையையும் காதையும் மறைத்து தான் போட்டிருந்த போர்வையுடன் மிதிவண்டியில் ஏறிய நேரத்தில் இந்தப் பாடலும், “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலும் ஒலிபரப்பாக மிதிவண்டியில் அப்படியே நின்றபடி கேட்டுவிட்டு சென்றார். புதுவை இரத்தினதுரையின் புரட்சிக் கருத்துக்களையும் நெகிழ்ச்சியான அனுபவங்கலையும் பாடலில் கேட்டு, உறைந்துபோன அந்த ஈழத் தமிழனின் செயலை கண்டு மனம் நெகிழ்ந்தேன்” என்று பூரிப்போடு கா.சிவதம்பி எழுதியுள்ளார்.

விரும்பி இடம்பெயர்வது வேறு - விரும்பாமல் வன்முறை செய்து இடம்பெற வைப்பதென்பது வேறு. புலம் பெயர வைப்பவன் - இறுதியில் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அவனை மன்னிக்கவே கூடாது என மனம் பதற வைக்கிறது புதுவை இரத்தினதுரையின் சில படைப்புகள்.


“ஊர் பிரிந்தோம்

ஏதும் எடுக்கவில்லை

அகப்பட்ட கொஞ்சம் அரிசி,

பருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து,

மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,

காற்றுப் போய்க்கிடந்த மிதிவண்டி,

காணியுறுதி,

அடையாள அட்டை அவ்வளவே,

புறப்பட்டு விட்டோம்.

இப்போ உணருகிறேன்

உலகில் தாளாத துயரெது?

ஊரிழந்து போதல் தான்.”

இந்த நிலை - அரை நூற்றாண்டாக... ஈழமண்ணில் தொடர்கிறது. இது நாளையும் தொடரும் என்கிற போது... சொல்லி புலம்ப சொற்களில்லை. இயலாமையால் மனம் மௌனமாகிறது.


“தம்பி பெஞ்சாதியின் தமையன் வீட்டில்

இரவில் பாய்விரிக்க எங்கு இடமிருந்தாலும்

அங்கு உடல் சரிப்பு.

வீட்டுக்காரரின் தூக்கம் கலையுமென

இருமலைக் கூட உள்ளே புதைப்பு

களவுக்கு வந்தவன் போல மனைவியுடன் கதைப்பு

கிணற்று வாளி தட்டுப்பட்டாலே படபடப்பு

ஒண்டுக்கிருத்தல்,

குண்டி கழுவுதல்

ஒவ்வொன்றையும் பயந்தபடி ஒப்பேற்றல்.”


இப்படி காலம் காலமாக சிதைந்தும் - மனம் சிதையாமல் இருப்பதெப்படி?. நம்பிக்கை. உண்மையின் மேல் ஈழத் தமிழர்கள் வைத்திருக்கும் பெரு நம்பிக்கை. இந்த நூற்றாண்டிற்கு மட்டுமல்ல - இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழனின் விடுதலைப் போராட்டத்திற்கான இந்த “எரிசக்தி” கையிருப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.


“இன்று நடை தளர்ந்தும்

நரை விழுந்தும் தள்ளாடும்

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய இளைஞர்களே!

வெள்ளைத் தோல் சீமான்கள்

வீடு திரும்ப மூட்டை கட்டியபோது

நீங்கள் ஏன் ஊமையானீர்கள்?”

என்று ஒரு ஞாயமான வினாவை தனது கவிதை மூலம் புதுவை இரத்தினதுரை எழுப்புகிறார். செய்யவேண்டிய வேலையை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்து விட்டால் தலைமுறைகள் ஏன் தத்தளித்தாடுகிறது என்று கேட்ட கவிஞர், இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் சுருக்கென சூடு வைக்க தயங்கவில்லை,


“உடல்கீறி விதை போட்டால்

உரமின்றி மரமாகும்

கடல் மீது

வலை போட்டால்

கரையெங்கும் மீனாகும்.

இவளின் சேலையைப் பற்றி

இந்தா ஒருவன்

தெருவில் இழுக்கின்றான்

பார்த்துவிட்டுப்

படுத்துறங்குபவனே!

நீட்டிப்படு.

உனக்கும் நெருப்பூட்டிக் கொளுத்த

அவனுக்கு வசதியாக இருக்கட்டும்.

‘ரோஷ’ நரம்பை

யாருக்கு விற்று விட்டுப்

பேசாமற் கிடக்கின்றாய்?”

இத்தகைய அற்புத படைப்பின் மூலம் - ஈழத் தமிழ்மக்களை போராட்ட களத்திற்கு செல்ல வழியமைத்தவர் புதுவை இரத்தினதுரை.


“......சும்மா காற்றில் பற்றியா இந்தத் தீ மூண்டது?

இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.

எத்தனை பேரைத் தீய்த்து

இந்த தீ வளர்த்தோம்.

எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்

அணைய விடக்கூடாது

ஊதிக்கொண்டேயிரு.

பற்றியெரியப் போகுதெனப் பதறுவர்

ஊதுவதை நிறுத்தி விடாதே

இந்தத் தீயின் சுவாலையிற்தான்

மண் தின்னிகள் மரணிக்கும்.”

மீண்டும் ஊரில் நுழைய - தெருவில் நடக்க - தன் வீட்டு நிழலில் களைப்பாற துடிக்கும் என் உறவு ஈழத்தமிழினத்திற்கு எப்போது விடிவுகாலம் பொறக்கும் என்று எண்ணும்படியாக துக்கம் தொண்டையை அடைக்க என்னை நிலைதடுமாற செய்தது புதுவை இரத்தினதுரையின் கவிதைகள். அவரின் படைப்பை மொத்தமாக ( நூல்: பூவரசம்வேலியும் புலுனிக் குஞ்சுகளும்; ஆசிரியர்: புதுவை இரத்தினதுரை; வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 432; விலை: ரூ.300) படித்து முடித்தபோது மண்ணைப் பற்றியும், மண்ணுக்கும் மனிதனுக்குமான பாசம் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும், உறவுப் பிரிவின் துயரங்களைப் பற்றியும், வாழ்க்கையின் உன்னதங்கள், அழகியலைப் பற்றியும், புரட்சியைப் பற்றியும், அறுந்துபோகாத உறுதியான நம்பிக்கைகள் எனக்குள்ளே கூடியிருப்பதை உணர்கிறேன்.


உண்மையான ஒவ்வொரு தமிழனிடமும் கவிதை மூலமாக புலம்பினார் புதுவை இரத்தினதுரை. மனித நேயமுள்ள உலகத்து மனிதர்களிடம் புலம்பினார். நெஞ்சு வெடித்து இனத்துக்காகக் கதறிய இந்த கவிஞனுக்கு என்ன சொல்ல போகிறது இந்த உலகம். பதறி துடிக்கும்போது கவனிக்காமல் போய் வழக்கம் போல் எழவுக்கு துக்கம் விசாரிப்பது போலவே இந்த பதிவையும் வருத்தத்தோடு எழுதுகிறேன்.

குறைந்த அளவு இரக்கத்தையாவது உலகம் காட்டியிருக்கக் கூடாதா ஈழமக்களுக்கு..?


என் வாழ்நாள் முழுவதும் உன்னை நினைத்து .......


ஈழக் கவியரசே

நீயும் என்ன

பாவம் செய்தாயோ

நானறியேன்

ஈழத்தமிழனாய்

நீ பிறந்ததை தவிர


எம்மின மக்களை

எவனும் மதிக்கவில்லை

இந்த உலகில்


சிங்களவனாவது

பறவாயில்லை

தமிழனை மிருகமாய்

மதித்து சுட்டுக்

கொல்கிறான்


ஈழக்கவியரசே

என்ன பாவம்

செய்தாயோ

நானறியேன்

ஈழத்தமிழனாய் நீ

பிறந்ததைத் தவிர


நீ கூவியதெல்லாம்

கவிதையானது

உன் கவி கேட்டவர்

கண்களில் கண்ணீரெல்லாம்

கடலானது


பிறந்த மண்

சுட்டிருந்தாலும்

விட்டுப் பிரிந்தால்

காலமெல்லாம் நின்று

வலிக்கும் மனமென்று

பாட்டில் அழுதவன் நீ


பாவி நீ


பக்கத்து நாட்டில்

பிறந்திருந்தால்


தமிழனை மறந்து

தமிழ் எழுதி இருந்தால் கூட

தமிழர்களே விழா எடுத்து

உனக்கு

விருது வழங்கி

பாராட்டு விழா நடத்தி இருப்பார்கள்


ஏன் புதுவை நீ அமெரிக்காவில்

மைக்கேல் யக்சனாய்

பிறந்து இறந்திருந்தால்


எத்தனை தமிழர்கள்

அழுது கவிதையால் உனக்கு

மறுமொழி போட்டு இருப்பார்கள்


படுபாவம் நீ

தமிழ்கவி உன்னை கொன்ற

சிங்களவன் துப்பாக்கி கூட

தான் சிரித்ததற்காய் ஒரு

தடவையாவது அழுதிருக்கும்


ஆனால்

நீ இறந்த தகவலை

கண்ணீரோடு பகிர்ந்த என்

கண்ணீரை துடைக்க கூட

ஒரு வார்த்தை இட இங்கு

எந்த தமிழனும் இல்லை

என்பதால்


ஈழத்தமிழன் நானும்

பாவம்தான்....


யாரும் உனக்கு

அனுதாப அஞ்சலி

தெரிவிக்காமல் போனாலும்

என் கண்ணீர் கவி எழுதினால்

அது உன் இறப்புக்காகத்தான்

இருக்கும்.




நன்றி
தொல்காப்பியன்
(இன்போதமிழ்)

செவ்வாய், 20 அக்டோபர், 2009

ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிவிட்டது? : பாரிஸ் 'ஈழநாடு'





வட்டுக்கோட்டையில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதாக சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட ஈழத் தமிழர்களது விடுதலைப் போர் புதிய பரிமாணங்களோடு புலம்பெயர் தேசங்களில் பலம் பெற்று வருகின்றது. இது சிங்கள தேசம் முற்றிலும் எதிர்பார்க்காத புதிய களமாக அமைந்துள்ளது.


விடுதலைப் புலிகளது இராணுவக் கட்டமைப்பை அழித்துவிட்டால், ஈழத் தமிழர்களின் விடுதலை வேட்கையை இல்லாமல் ஆக்கி விடலாம் என்பதே ராஜபக்ஷக்களின் கணிப்பாக இருந்தது. பிரபாகரன் அவர்களை மையப்படுத்தியே விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கி வந்ததால் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும் பிளவுகளும் உருவாகும் என்பதே சிங்களத்தின் கனவாக இருந்தது. அதற்கான பல சதிகாரர்களும் தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவ விடப்பட்டனர். பலவிதமான குழப்பங்கள் நிறைந்த செய்திகளும் வெளியிடப்பட்டன.

ஆரம்பத்தில் சிங்கள தேசம் எதிர்பார்த்தபடி புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும், சலசலப்புக்களும் உருவாகினாலும், அது வெகு விரைவாகவே தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் முறியடிக்கப்பட்டது. சிங்கள தேசத்தின் கொடூரங்கள் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப் பெற்றிருந்தால், இந்தக் குழப்பங்கள் நீடித்துச் சென்றிருக்கலாம். ஆனால், தொடர்ந்தே செல்லும் சிங்கள இனவாதக் கொடூரங்கள் வன்னி மக்களை வதை முகாமில் இட்டதன் மூலம்; ஒன்றிணைந்து போராடவேண்டிய அவசியத்தை புலம்பெயர் தமிழர்களுக்கு மேலும் மேலும் அவசியமாக்கியது.

தமிழீழ விடுதலையை வேகமாக முன்நகர்த்தும் பணிக்காக புலம்பெயர் தமிழர்கள் 'நாடு கடந்த தமிழீழ அரசு', 'உலகத் தமிழர் பேரவை' என்ற இரு அமைப்புக்களையும் இரு படை அணிகளாக முன்நிறுத்திச் செயற்பட, தமிழ் இளையோர் அமைப்புக்களும் போர்க் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆக மொத்தத்தில், 'ஐந்தாவது கட்ட ஈழப் போர்' புலம்பெயர் தேசங்களில் மையங்கொண்டுள்ளது என்றே கருதத் தோன்றுகிறது. ஆயுதம் ஏந்திய நான்கு கட்ட ஈழப் போர்களை விடவும் வீரியமாக இந்த ஆயுதம் ஏந்தாத போர் வீறு கொண்டு எழ ஆரம்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை புலம்பெயர் தேசங்கள் எங்கும் நடைபெற்ற சிங்கள அரசின் இன வன்முறைக் கொடுமைகளுக்கெதிரான போராட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டது இதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

தற்போது, நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் இடையே குழப்பத்தையும், போட்டியையும் உருவாக்கும் கைங்கரியங்களில் சிங்களக் கைக்கூலிகள் முனைந்து செயல்பட்டு வருகின்றனர். புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்த இரு அமைப்புக்களையும் இரு கண்களாக வளர்க்க முன் வந்துள்ள நிலையில், பதவி ஆசை பிடித்த சிலர் இரு அமைப்புக்களுக்கும் இடையே போட்டிகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னர், தமிழீழத் தேசியத் தலைமையே புலம்பெயர் தேசத் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளை நெறிப்படுத்தி வந்தனர். அதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்மேல் புலம்பெயர் தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கையும், விடுதலைப் புலிகளின் வீரமும், தியாகமும் புலம்பெயர் தமிழர்களை விடுதலைப் புலிகள் பக்கம் அணி திரள வைத்திருந்தது. ஆனாலும், தீர்க்க தரிசனப் பார்வை கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முன்னதாகவே அடுத்த கட்ட விடுதலைப் போரை புலம்பெயர் தேசங்களை நோக்கி நகர்த்திவிட்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடிக்க இந்திய - சிறீலங்கா கூட்டுப் போர் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே இருந்தன. இந்த கூட்டு எதிர் சக்திகளிடம் சரணடைவது அல்லது விடுதலைப் போரைத் தொடர்ந்து நடாத்தி, அந்த அர்ப்பணிப்பு மூலம் அதனைப் புலம்பெயர் தமிழர்களிடம் கையளிப்பது என்ற தெரிவில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமது இலட்சியத்தைக் கைவிட மறுத்து இறுதிவரை களமாடினார். அதற்கு முன்னதாகவே, கடந்த வருட மாவீரர் தின உரையில் புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் போராட்டத்தை ஒப்படைத்திருந்த அவரது தீர்க்க தரிசனம் மெய் சிலிர்க்க வைப்பதாக உள்ளது.

இந்த நிலையில், புலம்பெயர் தேசங்களில் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த இரு போராட்ட அமைப்புக்களும் கத்திமீதான பயணத்திற்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதையில் கொஞ்சம் சறுக்கினாலும் கால்கள் அறுபடும் அபாயம் உள்ளதை அவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். இவர்களது தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தை நெறிப்படுத்தும் பொறுப்பில் புலம் பெயர் தமிழர்களே உள்ளார்கள். இதில் எங்கு பிழை நேர்ந்தாலும், அதற்குக் காரணமானவர் மக்களால் தூக்கி எறியப்படும் சாத்தியம் பலமானதாகவே உள்ளது.

ஏற்கனவே, உலகத் தமிழர் பேரவையினரின் நாடு தழுவிய அமைப்புக்கள் ஜனநாயக உரிமை கொண்ட அமைப்பாளர் தெரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இரு வருட கால ஆயுள் கொண்ட இதன் நிறைவேற்று அமைப்பை அந்தந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களே ஜனநாயக முறைப்படி தெரிவு செய்வார்கள் என்பதை யாப்பு ரீதியாகப் பதிவு செய்துள்ளார்கள். மாறும் தலைமை முறை கொண்ட இந்த அமைப்பு முறை தவறுகளுக்கு இடம் கொடுக்காது திறமைகளுக்கே இடம் கொடுக்கின்றது. பெரும்பாலும், நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பும் இவ்வாறான யாப்பு மூலமான உரிமைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம், இந்த இரு அமைப்புக்களும் தமிழீழ விடுதலைப் போரை மக்கள் பலத்துடன் முன் நகர்த்திச் செல்ல முடியும்.

நாங்கள் போகும் பாதை எதுவாக இருப்பினும் இலக்கு என்பது தெளிவானதாக இருக்க வேண்டும். இலக்குத் தவறிய பயணம் ஒட்டு மொத்த தமிழீழ மக்களையும் மீண்டும் புதைகுழிக்கே அழைத்துச் செல்வதாக முடியும். தமிழீழ தேசியத் தலைவரது தமிழீழம் என்ற இலக்கில் சமரசம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வட்டுக்கோட்டை வரை முள்ளிவாய்க்கால் வரை அத்தனை இழப்புக்களையும் தமிழினம் தாங்கிக்கொண்டது தமிழீழம் என்ற இலட்சியத்திற்காகவே. அதில் சமரசம் செய்யும் எந்த முயற்சியிலும் யாரும் ஈடுபட முடியாது என்பது இறுதியான, உறுதியான முடிவாகும்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் புலம்பெயர் தேச தமிழீழ மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஐந்தாம் கட்ட ஈழப் போரை வேகமாக முன்னெடுத்து தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பணியையே இந்த அமைப்புக்களின் தலைமைகள் முனைந்து செயற்படுத்த வேண்டும். அல்லது அவர்கள் தமது பொறுப்புக்களிலிருந்து விலகி இலட்சியத்தை முன்னெடுக்கும் தகுதி உள்ளவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

நன்றி: பாரிசு ஈழநாடு

புதன், 14 அக்டோபர், 2009

கலைஞரின் திரைக் கதை வசனத்துடன் மீண்டும் ஒரு 'இந்தியத் துரோகம்'!

ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் இன அழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்திருந்த வேளையில், தமிழகத்தின் தமிழுணர்வாளர்கள் பொங்கி எழுந்தார்கள். ஈழத்தில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் பரவாயில்லை, தன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளவோ, தமிழகத்தின் எழுச்சியை அலட்சியப்படுத்தவோ முடியாத தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தடீர் உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து அண்ணா சமாதியின் முன்பாக அமர்ந்துகொண்டார்.

கலைஞர் அவர்கள் உண்ணாவிரதத்தினை ஆரம்பித்த அடுத்த சில கால் மணி நேரங்களில் பந்தல் அமைக்கப்பட்டு, படுக்கை விரிக்கப்பட்டு, குளிரூட்டிகள் கொண்டுவரப்பட்டு, தலைமாட்டில் மனைவியாரும், கால்மாட்டில் துணைவியாருமாக அமர்ந்து கொண்டனர்.
கலைஞர் அவர்களது உண்ணாவிரதச் செய்தி டெல்லிக்குப் பறந்தது. மூன்று மணி நேரத்தில் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சி பொங்க அறிவித்த கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். தமிழகம் அமைதியானது.

அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள்.

நடந்தேறிய கொடுமைகள் அனைத்தும் உலக நாடுகளை உலுக்கி எடுத்தது. மனிதாபிமானம் கொண்ட நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிங்கள அரசால் நடாத்தி முடிக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் குரல் எழுப்பின. காந்தி தேசம் அதை எதிர்த்தது. காந்தி தேசத்துடன் சீனாவும், பாக்கிஸ்தானும் ஒன்று சேர்ந்து போர்க் குற்ற விசாரணைக்குத் தடை போட்டது.

இத்தனை அவலங்களும் நிகழ்ந்தேறியபோது தமிழகத்தில் மாண்புமிகு முதலசை;சராக கலைஞர் கருணாநிதி அவர்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார். தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான தி.முக. அணியும், சுதர்ஷன நாச்சியப்பன் தலைமையிலான காங்கிரஸ் அணியும் தமிழகத்தில்தான் இருந்தனர். வன்னி மக்களின் அவலங்கள் குறித்து தி.மு.க. சார்பில் அவ்வப்போது நீலிக் கண்ணீர் வடிக்கப்பட்ட போதும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ராஜபக்ஷவுக்கு விருது வழங்காத குறையுடன் அவ்வப்போது பாராட்டுதல்களை அள்ளி வழங்கினார்கள்.

நடைபெற்று முடிந்த யுத்தமும், தொடரும் வன்னி மக்களின் அவலமும், கடத்தல்களும், தமிழினப் படுகொலைகளும் மேற்குலகின் மனிதாபிமானத்திற்கு விடப்பட்ட சவாலாகவே தோற்றம் பெற்றது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்த நாடுகளால், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி மேற்குலகை ஆட்கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போராட்டங்களும் புலம்பெயர் தேசங்களின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கியது. இது இதுவரை இந்தியா மேற்கொண்டுவந்த இலங்கை தொடர்பான சுயலாபக் கொள்கைக்கும் சவாலாகவே அமைந்துவிட்டது.

மேற்குலகினதும், அமெரிக்காவினதும் தற்போதைய சிறிலங்கா தொடர்பான கொள்கை மாற்றம் ஈழத் தமிழர்களை இந்திய ஆதரவுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்கள் பாதை விலகிச் செல்வது இந்திய இராஜதந்திரத்திற்குக் கிடைத்த முதல் அடியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள். இதனால், ஈழத் தமிழர்களை மீண்டும் தம்மை நம்ப வைக்கும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது.

இதுவே, தற்போதைய தமிழக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் இலங்கைப் பயணமாக அமைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை நாராயணனும் மேனனும் சிறிலங்கா சென்று காட்சிகள் மாறாமல் பார்த்துக் கொண்டது போல், இப்போது தமழீழ மக்கள் மாற்றம் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்காக தமிழக உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவும் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய மூன்று மணி நேர உண்ணாவிரதம் போன்றதே. எதுவும் நடைபெறாமலேயே இந்தக் குழுவினர் தமிழகம் திரும்பியதும் வெற்றிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள்.

தமிழகத்தில் தற்போது தி.மு.க. வை எதிர்த்து நிற்கக்கூடிய அணி ஒன்று இல்லை என்றே கருதப்படுகின்றது. அ.தி.மு.க. அணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி கழன்று விட்டது. செல்வி ஜெயலலிதா அடிக்கடி காட்டிவரும் அகோர முகத்தினாலும், விவேகமற்ற அரசியல் நடவடிக்கைகளாலும் அந்தக் கட்சியின் தொண்டர்களே சலிப்புற்றுப் போயுள்ளார்கள். இந்த நிலையில் தனக்குக் கிடைத்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் சில சட்டமன்ற உறுப்பினர்களையும் பெறுவதானால், தொல். திருமாவளவன் அவர்கள் கலைஞரை எதிர்த்து சுயமாக உண்மைகளைப் பதிவு செய்ய முடியாது. எனவே அவரது பயணமும் ஒரு சுற்றுலாவாகவே முடியப் போகின்றது.

சிங்களத்திற்குப் பலி கொடுக்க வெள்ளாடுகள் தனது பட்டியில் இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணத்தை நிறைவேற்றவே கலைஞர் கருணாநிதி திரைக் கதை வசனம் எழுதி மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போயுள்ளார். தமிழீழம் என்ற வார்த்தையையே தமது அகராதியிலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தீவினுள் வாழ்வதற்காகத் தமிழர்களைச் சமரசம் செய்வதே இந்தக் குழுவின் பணியாக இருக்கும். இது ஈழத் தமிழர்களை மீண்டும் புதை குழிகளுக்குள் அனுப்பும் இந்திய முயற்சியாகவே இந்தப் பயணம் நோக்கப்படுகின்றது.
நன்றி - ஈழநாடு