எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்! மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

போஸ்" கொடுக்கும் தமிழச்சிகள்!

சென்ற ஆண்டு கேரளாவைச் சேர்ந்த இந்தியாவின் பிரபல பெண்ணிய எழுத்தாளரான கமலாதாஸிடம் ஆனந்த விகடன் பேட்டி கண்டது. அப்பொழுது அவரிடம் "உங்களுக்கு பிடித்த தலைவர் யார்" என்று கேட்கப்பட்டது.

கமலாதாஸ் எவ்வித தயக்கமும் இன்றி பளிச் என்று சொன்னார், "புலிகளின் தலைவர் பிரபாகரன்". அத்துடன் புலிகளை இந்தியா தீவிரவாதியாக சித்தரிப்பது தவறு என்றும் சொன்னார்.

இத்தனைக்கும் கமலாதாஸ் ஒரு தமிழ் பெண்மணி அல்ல. ஆனால் தமிழ் மக்களின் தலைவரையும், விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் நியாயத்தன்மையையும் உணர்ந்தவராக இருந்தார்.

இப்படி வேற்று இனத்தை சேர்ந்த பலரே தமிழீழ மக்களின் போராட்டம் சரியானது என்று ஏற்றுக் கொள்கின்ற போது, கூலிக்கு மாரடிக்கும் தமிழர்கள் சிலர் தமிழீழ போராட்டத்தை கொச்சைப் படுத்தி துரோகம் புரிந்து வருகின்றார்கள். இந்த இழிவான செயலில் ஆண்களுக்குப் போட்டியாக சில பெண்களும் ஈடுபடுவதுதான் வேதனையானது.

சம உரிமை என்பதை தவறாகவே புரிந்து வைத்திருக்கும் இந்தப் பெண்கள் துரோகம் செய்வதிலும் சம உரிமை வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.

தமிழீழத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஒரு பெண்கள் குழு ஆண்டு தோறும் சந்தித்துக் கலந்துரையாடுவது வழக்கம். இந்த ஆண்டும் "பெண்கள் மாநாடு" என்று பெயரில் இருபதிற்கும் குறைவானவர்கள் கூடினார்கள். இவர்களின் உள்நோக்கம் புரியாத சிலரையும் பெண்ணுரிமை என்று சொல்லி சந்திப்பிற்கு அழைத்திருந்தார்கள்.

வழமை போன்று இந்த ஆண்டும் தமிழீழப் போராட்டத்தை வேறவேறு வடிவங்களில் கொச்சைப்படுத்தினார்கள். இந்த பெண்கள் சந்திப்பை ஒழுங்கு செய்வதில் முன்னணியில் நின்று வேலை செய்யும் இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் "இலங்கையில் தமிழ் பெண் தற்கொலைதாரிகள்" என்று ஒரு கட்டுரையை வாசித்தார்.

அந்தக் கட்டுரையின் மூலம் தமிழீழப் போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகள், பெண் போராளிகள் என்று அனைத்தையுமே இழித்துரைத்தார். ஈழப் பிரச்சனை பற்றி மற்றவர்களும் இதையொத்த செயலைத்தான் இந்தச் சந்திப்பில் செய்தனர். இவர்கள் சென்ற ஆண்டும் இதைத்தான் செய்தார்கள். இந்த ஆண்டும் செய்தார்கள். இனிமேலும் செய்வார்கள்.

தமிழீழ மக்களின் மிகப் பலமான ஆயுதமாக உயிராயுதம் இருக்கிறது. இந்த உயிராயுதமாகிய கரும்புலிகளை கலைக்கச் சொல்லி ஏகாதிபத்திய அமெரிக்காவும் சொல்கிறது. பார்ப்பனிய இந்தியாவும் சொல்கிறது. இனவாத சிங்கள அரசும் சொல்கிறது. இந்தப் பெண்கள் சந்திப்பும் சொல்கிறது.

இதில் இருந்தே இவர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

பெண் விடுதலை என்பதில் பல புரட்சிகளை தமிழீழ தேசம் செய்து காட்டியிருக்கிறது. பல நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டங்களில் பெண்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள். சண்டைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட பெண்கள், சண்டை முடிந்ததும் மீண்டும் அடுக்களைக்கு அனுப்பப்பட்டார்கள். குழந்தை பெறுவதற்கு அனுப்பப்பட்டார்கள்.

ஆனால் தமிழீழத்தில் மட்டும்தான் பெண்களும் நிர்வாகத்தில் சம அளவு பங்கேற்கிறார்கள். தமிழீழத்தில் நடைபெறும் நீதித்துறை, காவல்துறை, அரசியல்துறை, நிதித்துறை மற்றும் பல நிறுவனங்களில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

யுத்த களங்களில் கூட பெண்களுக்கு பின்தள வேலைகள் மட்டுமே மற்றைய நாடுகள் வழங்குகின்றன. தமிழீழத்தில் பெண்களே பல சண்டைகளை முன்னின்று நடத்தி சிங்களப் படைகளை விரட்டி அடித்து சாதனை புரிந்திருக்கிறார்கள்.

இப்படி போர் என்றாலும் சரி, நிர்வாகம் என்றாலும் சரி, பெண்களுக்கு சம உரிமையை தமிழீழ தேசம் வழங்கி இருக்கிறது.

பழமைவாத மரபுகளுக்கு பல நூற்றாண்டுகளாக சிக்குப்பட்டிருந்த தமிழர் தேசம் கண்டுள்ள மாற்றங்கள் வியக்கத்தக்கன. மிகப் பெரும் புரட்சிகள் இவைகள். வீடுகளிலும் வீதிகளிலும் இருந்த பெண்ணடிமைத்தனத்தில், இன்றைக்கு வீதிகளில் இருந்த பெண்ணடிமைத்தனம் பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ் பெண்கள் வீதிகளுக்கு வந்து இனவாத அடக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்வதை தமது தொழிலாக சில பெண்கள் கொண்டுள்ளார்கள். தங்களை தமிழச்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள், அப்படிச் சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும்.

பெரும் வல்லரசுகளை எதிர்த்து புரட்சி செய்கின்ற பெண்கள் தமிழீழத்தில்தான் இருக்கின்றார்கள் என்பதை காகிதத்தில் கலகம் புரிவதாக சொல்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் பெண்களின் எழுச்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களிடம் போய் தங்கள் கலகத்தை காட்ட வேண்டும். ஆனால் காகிதக் கலகக்காரர்களும் தமிழீழ பெண்களின் எழுச்சிக்கு எதிரானவர்களுடன் கைகோர்த்து புகைப்படத்திற்கு "போஸ்" கொடுக்கிறார்கள்.

இவர்களால் புகைப்படத்திற்கு "போஸ்" கொடுக்க மட்டும்தான் முடியும். இதைவிட பெண்களுக்கான விடுதலையில் ஒரு மாற்றத்தையும் செய்ய முடியாது.

ஆனால் ஒரு காலத்தில் முகத்திற்கு பவுடர் பூசி நகை அணிந்து புகைப்படத்திற்கு "போஸ்" கொடுத்துக் கொண்டிருந்த தமிழீழத்தின் பெண்கள் கூட்டம், இன்றைக்கு வேர்த்து வடிகின்ற முகத்தோடு உச்சி வெய்யிலில் மக்களின் விடுதலைக்காக பணி செய்து கொண்டிருக்கிறார்கள். புரட்சி செய்கின்ற இந்தப் பெண்கள் தமிழீழத்தில் இருந்து பெண்ணடிமைத்தனத்தை முற்றிலுமாக இல்லாது ஒழிப்பார்கள்.